’என்னிடம் வைக்கும் பிரார்த்தனைகளை நிச்சயம் நிறைவேற்றித் தருவேன்!’ - அருள்மழை பொழியும் ஷீர்டி சாயிபாபா 

By வி. ராம்ஜி

‘என்னிடம் நீங்கள் வைக்கும் பிரார்த்தனைகள் எதுவானாலும் அவற்றை நிச்சயம் நிறைவேற்றித் தருவேன்’ என்கிறார் பகவான் ஷீர்டி சாயிபாபா.
பகவான் ஷீர்டி சாயிபாபா, மகத்துவம் நிறைந்த மகான் மட்டுமில்லை. இந்தக் கலியுகத்தின் கண் கண்ட தெய்வமும் கூட. லட்சக்கணக்கான பக்தர்கள், பாபாவை, இறையின் தூதனாகவும் மகானாகவும் கடவுளாகவுமே பார்க்கிறார்கள்.

பாபாவின் பேச்சு குறைவுதான். ஆனால் அவரின் செயல்களே பேச்சுகளாகவும் அருளாகவும் பக்தர்களை அரவணைப்பதாகவும் இருந்தன. இன்றைக்கும் இருக்கின்றன.
பாபாவிடம் நாம் நம்முடைய கோரிக்கைகளை முன் வைப்பதற்கு முன்னதாக ஒன்றை புரிந்து உணர்ந்துகொள்ளவேண்டும். ’எந்த விஷயத்திலும், எந்த சமயத்திலும், எந்தச் சூழலில் நாம் தன்னந்தனியாக இருக்கிறோம், நமக்கென்று எவருமே இல்லையே என்று சுயகழிவிரக்கம் கொள்ளாதீர்கள். உங்களுக்குத் துணையாக நானிருக்கிறேன் என்பதை முழுமையாக நம்புங்கள்’ என்கிறார் பகவான் ஷீர்டி சாயிபாபா.

’கர்மவினைகள் என்பவையெல்லாம் மனிதர்களுக்கு நிச்சயம் உண்டு. கர்மவினைகளில் இருந்து என் பக்தர்களைக் கடைத்தேற்றுவதற்குத்தான் நானிருக்கிறேன். உங்கள் கர்மாவை தொலைப்பதற்காகத்தான் இந்தப் பிறவியை நீங்கள் எடுத்திருக்கிறீர்கள். அந்தக் கர்மாவை நீங்கள் அனுபவித்துதான் ஆகவேண்டும். ஆனால் உங்களின் பிரார்த்தனைகளாலும் வழிபாடுகளாலும் நீங்கள் என்னை மனமுருக அழைத்தீர்களென்றால், உங்களுக்கு நானிருக்கிறேன். உங்களை நான் காப்பாற்றுவேன்’ என்கிறார் சாயிபாபா.

’ஜனன மரணத்திற்கு அப்பாற்பட்டவன் நான். என்னை வணங்கி, மனமுருக யாரெல்லாம் பிரார்த்தனை செய்கிறீர்களோ அவர்களின் குரலையும் கோரிக்கையையும் நான் கேட்கிறேன். அவர்களின் பிரார்த்தனைகள் அனைத்தையும் நிறைவேற்றித் தருகிறேன்’ என அருளியுள்ளார் பாபா.

பாபாவின் கதைகளை வெறுங்கதைகள் என்று நினைத்துவிடாதீர்கள். பாபாவின் சரிதம் கேட்கக் கேட்க இனிமையைத் தருபவை. படிக்கப் படிக்க அமைதியைக் கொடுப்பவை. புரிந்துகொள்ள புரிந்துகொள்ள நல்லொழுக்கத்தையும் பக்தியும் விளைவிப்பவை. பாபாவை மகானாகப் பார்த்தால் மகானின் அருளாடலைச் செய்வார். உங்கள் தந்தையாக பாவித்து கோரிக்கை விடுத்தால், தந்தையைப் போல பக்கத்துணையாக இருப்பார். பாபாவை ஒரு அன்னையாக நினைத்து வேண்டிக்கொண்டால், கருணையும் கனிவுமாக உங்களுக்கு எல்லாமுமாக இருப்பார்.

முக்கியமாக, கருணைக்கடலான பாபாவை, கடவுளாக பாவித்து வணங்கினால், சகல் விதங்களிலும் தன் அருள்மழையை உங்களுக்குப் பொழிந்து கொண்டே இருப்பார் சாயிபாபா.

ஷீர்டி சாயிபாபாவிடம் உங்கள் பிரார்த்தனைகளை மனமுருக வைத்து வேண்டிக்கொள்ளுங்கள். பாபாவை நினைத்து பத்துபேருக்கேனும் உணவுப்பொட்டலம் வழங்குங்கள். அந்த உணவுப்பொட்டலங்கள் எல்லாமே, பிரசாதங்களாகின்றன. பாபாவின் பிரசாதங்கள் சகல விஷயங்களையும் நிவர்த்தி பண்ணிக் கொடுக்கும். பிரசாதத்தை வழங்கிய உங்களுக்கு இனி எல்லாக் காரியங்களையும் வழிநடத்திக் கொடுப்பார் சாயிபாபா.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE