இந்த வாழ்க்கையே நமக்கு வரம்தான். ஆனால் வாழ்க்கைக்குள் நிகழ்கிற விஷயங்களை பூதாகரமாக்கிப் பார்க்கிற சராசரி மனிதர்கள்தான் நாம். ’தோஷத்துக்கு குறைவே இல்லப்பா, இந்த சந்தோஷம்தான் நம்ம பக்கத்துல வரவே மாட்டேங்கிது’ என்று அலுத்துக் கொள்கிறவர்கள்தான் இங்கு அதிகம்.
முதலில் ஒரு விஷயம்... நம் ஜாதக ரீதியாக கிரக தோஷங்கள் என்பது பூர்வ ஜென்மத்தால் விளைகிறது. பூர்வ ஜென்மத்துக்கான நன்மை தீமைகள், கிரக அமைப்புகளால் இந்த ஜென்மத்துக்கும் தொடருகிறது. அதன் வினைப்பயன்கள் நல்லவையோ கெட்டவையோ அவற்றை நாம் இந்தப் பிறவியில் அனுபவித்தே ஆகவேண்டும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.
ஆக, கிரக தோஷம் என்பது முன் ஜென்ம வினைப் பயனால் ஏற்படுகின்றன. கிரகங்களால் ஏற்படுகிற தோஷங்களை நிவர்த்தி செய்வதற்கான பரிகாரங்களும் ஜோதிட சாஸ்திர நூல்களில், அறிவுறுத்தப்பட்டிருக்கின்றன.
தோஷங்களில் மிக முக்கியமானது களத்திர தோஷம் என்கிறார்கள். இந்த களத்திர தோஷம் இருந்துவிட்டால், திருமணம் தடைப்பட்டுக் கொண்டே இருக்கும். வாழ்வில் அடுத்தக்கட்டத்துக்கு நாமும் நம்முடைய பரம்பரையும் வளர வேண்டுமெனில், வாழ வேண்டுமெனில் அவற்றுக்கு மிக முக்கியத் தேவை திருமணம். ‘வயசு ஏறிக்கிட்டே போவுது, இன்னும் பொண்ணுக்கு கல்யாண யோகம் கூடி வரலியே’ என்று வருந்துவார்கள். ‘பையன் கை நிறைய சம்பாதிக்கிறான். ஆனா ஒரு கால்கட்டு முடியாம தள்ளிப்போயிகிட்டே இருக்கு’ என்று கண்ணீர் விடுவார்கள்.
முப்பது பிளஸ் கடந்தும் திருமணம் ஆகவில்லை. நாற்பதை நெருங்கியும் திருமணம் நடந்தேறவில்லை என்றெல்லாம் சொல்வதற்கு மிக முக்கியக் காரணம்... ஜாதகத்தில் களத்திர தோஷம் என்கிறார்கள் ஜோதிடர்கள்.
அப்படி, திருமணம் தள்ளிப்போய்க் கொண்டே இருக்கிறது, வயது ஆகிக்கொண்டே இருக்கிறது என்பவர்கள், ஜாதகத்தை ஜோதிடர்களிடம் காண்பித்து, தோஷம் இருக்கிறதா என்பதை உறுதி செய்யுங்கள்.
அதேசமயம், களத்திர தோஷம் தீர்க்கும் கோயில்கள் பல இருக்கின்றன. மிக முக்கியமாக, குருவின் ஆதிக்கம் நிறைந்த ஆலயங்களுக்குச் சென்று வழிபடுவது நன்மைகளைத் தரும். வளம் சேர்க்கும். பலம் தரும். குரு பலம் கூடி வந்தாலே களத்திர தோஷம் விலகும் என்பது ஐதீகம்.
திருமண பரிகார திருத்தலம் என்று போற்றப்படுகிற தலம் திருமணஞ்சேரி. கும்பகோணம் ஆடுதுறை அருகில் உள்ள அற்புதமான திருத்தலம். ஒருமுறை இங்கு சென்று இறைவனையும் அம்பாளையும் வணங்கி வந்தாலே, திருமண பாக்கியம் கைக்கூடி வரும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
குரு பலம் நிறைந்த தலங்கள், குரு ஆதிக்கம் நிறைந்த திருத்தலங்கள் ஏராளம். ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயில், திட்டை குரு பகவான் கோயில், சிவகங்கை பட்டமங்கலம் திருக்கோயில், சென்னை பாடி திருவலிதாயம் திருக்கோயில், திருச்சி உத்தமர் கோவில் முதலான ஆலயங்களுக்குச் சென்று வழிபடுவது குரு பலத்தைத் தந்தருளும். குரு யோகம் பெறலாம்.
திருச்சி மண்ணச்சநல்லூரை அடுத்து திருப்பைஞ்ஞீலி திருத்தலம் உள்ளது. இந்தத் தலமும் களத்திர தோஷம் போக்குகின்ற திருத்தலம். ஞீலிவனநாதரை வழிபட்டு தரிசித்தாலே திருமண யோகம் தேடி வரும் என்பது ஐதீகம்.
திருச்சி திருப்பட்டூரில் அமைந்திருக்கும் பிரம்மா கோயிலும் வெகு விசேஷமானது. குரு பலம் பொருந்திய திருக்கோயில். தலையெழுத்தை திருத்தி அருளுகிற ஆலயம். இங்கே பிரமாண்டமான பிரம்மா நம் தலையெழுத்தையே திருத்தி அருளக் காத்திருக்கிறார். மேலும் முருகக் கடவுள், ஞானகுருவாகத் திகழ்கிறார். பிரம்மாவின் சாபம் போக்கி படைப்புத் தொழிலை வழங்கியருளிய பிரம்மபுரீஸ்வரரும் கருணையே உருவாகக் காட்சி தருகிறார்.
முக்கியமாக, வியாக்ரபாதரும் பதஞ்சலி முனிவரும் திருச்ச்சமாதி கொண்டு அருள்பாலிக்கின்றனர், இந்த திருப்பட்டூர் திருத்தலத்தில்!
களத்திர தோஷம் நீக்கும் கோயிலுக்குச் சென்று வழிபடுங்கள். தோஷம் போக்கும் ஆலயத்துக்குச் சென்று பிரார்த்தனை செய்யுங்கள். விரைவில் திருமண யோகம் அமையப் பெறலாம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.