முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணியில் இருந்து ஒன்பது கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் அருங்குளத்தில், பதினைந்தாவது தீர்த்தங்கரரான தருமம் அருளிய தருமநாதர் எழுந்தருளியுள்ளார். தமிழ்நாட்டில் தருமநாதருக்கான ஒரே ஆலயம் என்ற சிறப்புடையது இத்தலமாகும். ஒன்பதாம் நூற்றாண்டில் இக்கோயில் அச்சணந்தி மாமுனிவரின் ஆசியுடன் கார்வெட்டி வேந்தர் ஆட்சியில் கட்டப்பட்டது.
கருவறை, அர்த்த மண்டபம், உட்பிரகாரம், முக மண்டபம், வெளிப்பிரகாரம், உயர்ந்தோங்கிய சுற்று சுவருடன் குடவரை ஆகியவை உள்ளன.
மணம்பரப்பும் மனோரஞ்சிதம்
தீர்த்தங்கரர் தர்மநாதர் அமைதியான முகத்துடன் சிங்காதனத்தில் அமர்ந்த நிலையில் காட்சிதருகிறார். அவரின் இருபுறமும் சாமரம் வீசும் தேவர்கள்,பிரபை வட்டம், பிண்டி மரம் முதலியவை அழகாக வடிக்கப்பட்டுள்ளன.கருவறைக்கு மேல் மூன்று அடுக்கு விமானம் அமைக்கப்பட்டுள்ளது.அதன் மேற்கு திசையில் பார்சுவநாதரின் உருவமும் இருபுறமும் அச்சணந்தி மாமுனிவர் உருவங்களும், சுல்லக் துறவி உருவமும் உள்ளன.
கருவறைக்குப் பின்புறம் அணியா அழகர், பார்சுவநாதரின் கற்சிலை காணப்படுகிறது.தல விருட்சமாக மனோரஞ்சிதம் மணம் பரப்புகிறது. ஆலயத்தின் தினபூசை மேடையில் தரும தீர்த்தங் கரர் கற்சிலை ஒன்றும் அச்சணந்தி மாமுனிவரின் நினைவாக கற்பீடமும் அமைந்துள்ளன.
முகமண்டபத்தின் தெற்கில் யட்சன் பிரம்மதேவரின் மூன்று சிலைகள் உள்ளன.அதேபோன்று யட்சி தர்மதேவியின் மூன்று சிலைகள் வடபகுதியில் உள்ளன.
இக்கோயிலில் ஏர் உழும் கலப்பைக்கு சிலை எடுக்கப்பட்டு இன்றும் வணங்குகிறார்கள்.உழவு ஆரம்பிக்கும் நாளன்று அச்சிலைக்கு பூஜைகளும் நடக்கின்றன. இச்சிறப்பு இந்த ஜினாலயத்திற்கே உரியதாகும்.
ஆதவனின் அதிசயம்
ஆண்டுதோறும் பங்குனி மாதத்தின் முதல் மூன்று நாட்களில், இக்கோயிலின் மூலவர் தருமநாதர் மேனியில் சூரியக் கதிர்கள் பட்டு ஒளிர்கின்றன. கோயிலிலிருந்து சுமார் 500 மீட்டர் தூரத்தில், எந்திரம் பொறித்த செவ்வக வடிவ கற்பலகை துளையுடன் நிற்கிறது. அத்துளை வழியாக சூரிய ஒளி பாய்ந்து சென்று கோயில் கருவறையிலுள்ள பகவான் தருமநாதர் மீது ஒளிர்கிறது. ஆதவனின் ஆராதனை அதிசயம் இது.
காப்பியம் பிறந்த ஊர்
சமணர்கள் படைத்த ஐஞ்சிறுங் காப்பியங்களில் ஒன்றுதான் சூளாமணி. அந்த மாமணி சூளாமணியின் ஆசிரியர் தோலா மொழித்தேவர் இவ்வூரைச் சேர்ந்தவர். அவர் இங்குள்ள பகவான் தருமநாதர் மீது மிகுந்த பக்தி கொண்டவர். அவரே “புகழ்த் தருமதீர்த்தன் மலர்ப்பதம் பூசிப்போன் சொற்கெட்டா வரன் தோலாமொழி சூளாமணியுணர்வோர் துறைக் கண்டோரே”என்கிறார்.
இந்த ஜினாலயத்தில் தோலாமொழித்தேவர் சூளாமணியை அரங்கேற்றினார் என்று முனைவர் ஏகாம்பரநாதன் கூறுகிறார்.