கோவை மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் செங்குறிச்சி கிராமம் ஸ்ரீ கனகவல்லி நாயிகா சமேத ஸ்ரீ லட்சுமிநாராயணப் பெருமாள் திருக்கோயிலில் நூதன ராஜகோபுர அஷ்டபந்தன மகாசம்ப்ரோட்சணம், 02.02.15 திங்கள் கிழமையன்று காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் சிறப்பாக நடைபெற்றது.
கோப்பெரும்சிங்கன் என்ற மன்னன் இப்பகுதியில் நிலங்களை தானமாக அளித்ததால் தனக்கு குழந்தை பாக்கியம் கிடைத்ததாகத் தெரிவிக்கும் கல்வெட்டு காணக்கிடைக்கிறது. இந்த திருக்கோவிலில் கனகவல்லி நாயிகா சமேத லஷ்மிநாராயணப் பெருமாள் காட்சி அளிக்கிறார்.
கை கூப்பிய வண்ணம் காணப்படும் தாயார் இங்கு அதிசயம். இதனைப் பார்த்தால் பக்தன் வேண்டுவனவற்றை, பகவானிடம் பரிந்துரைக்கும் பாங்கு வெளிப்படுகிறது. பொன்னான மனங் கொண்டதால், தாயாருக்கு கனகவல்லி என்பது திருநாமம்.
யோகி வேமண்ணா என்ற துறவி, இத்திருக்கோயிலில் உள்ள பெருமாளுக்குத் தேவையான மலர்களை அளிப்பதற்காக நந்தவனம் ஒன்றை அமைத்து பெருமாளுக்கு மலர் அளித்து பூஜித்து வந்ததாக இங்குள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது. NH 45 என்ற தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ளது இக்கோயில்.
திருக்கோவிலூர் மற்றும் திருவஹிந்திபுரம் ஆகிய திவ்ய தேசங்களுக்கு இடையில் இத்திருக்கோயில் உள்ளது.