ஏன் தமிழ்சினிமா இந்து மதத்தை வளர்க்காது. உபன்யாசம் மட்டும்தான் வளர்க்குமா. துள்ளிக்குதித்து கோவிந்தா கோவிந்தா என்று வட்டம் அடித்து ஆடுவதுதான் வளர்க்குமா? 'நான் சொல்றதைக் கேட்டுக்கோ. என் காலை கெட்டியாப் பிடிச்சுக்கோ' என்று கால் நீட்டுகின்ற குருமார்களை வைத்துத்தான் இந்துமதம் வளர்கிறதா? கோவில் பூசாரிகளால்தான் வளர்கிறதா. சூலமா, வெறும் கருங்கல்லா. மிகப்பெரிய கோபுரமா, மனதைக் கொள்ளை கொள்ளும் அழகிய சிற்பமா! இவை எல்லாவற்றாலும் இந்துமதம் வளர்ந்திருக்கும் போது சினிமாவால் வளராதா?
ஔவையார் என்றால் யார் ஞாபகம் வருகிறது. டி.கே.சண்முகம், சுந்தராம்பாள்தானே. கிருஷ்ணன் என்றால் யார் மனதில் நிழலாடுகிறார்கள். என்.டி.ராமாராவ்தானே. முருகராக சிவகுமார் எத்தனை பாந்தமாக இருந்தார். எங்கோ தொலைவில் இருட்டுக்குள் மின்ன, ஒரு அழுக்குப் பட்டுப்புடவையில் இருக்கின்றன பார்வதி தேவியை விட, சாவித்திரி இன்னும் பெரிதில்லையா. சிவாஜி கணேசன் சிவனாக வரும்போது மனம் அதில் லயிக்கவில்லையா. இது இந்து மதத்திற்கு மட்டுமல்ல. ஒரு பைபிளைக் கரைத்துக் குடிப்பதற்கு பதிலாய் 'ஜீசஸ் ஆஃப் நாசரேத்' என்ற திரைப்படத்தைப் பாருங்கள். பைபிளை விட நெருக்கமாக உங்களுக்கு கிறிஸ்துவை அறிமுகப்படுத்திக் காட்டும். அந்தப் படத்தை தமிழ்படுத்தாமல் இருப்பது ஒரு பரிதாபம். மிகச் சிறப்பான அந்தப்படம் தான் எனக்கு இயேசு கிறிஸ்துவை முழுமையாக அறிமுகப்படுத்தியது.
ஆனால், முகமது நபியை பற்றிச் சொல்ல எனக்கு அப்படி ஒரு திரைப்படம் இருக்கிறதா என்று தெரியவில்லை. புத்தரைப் பற்றி அற்புதமான படங்கள் வந்திருக்கின்றன.
எல்லா மதமும் தங்கள் மதத்தைச் சொல்ல சினிமாவை ஒரு கருவியாக பயன்படுத்துகின்றன. குறைகள் இருக்கலாம். ஆனாலும் நல்லது செய், என்னைச் சரணடை, தீயது செய்யாதே என்று மிகத் தெளிவாக இந்துமதம் பற்றி சினிமாவும் சொல்லியிருக்கிறது.
கன்னட இயக்குனர் ஜீ.வி அய்யரின் சில திரைப்படங்களைப் பாருங்கள். அது மேலான வகையில் இந்து மதத்தை அறிமுகப்படுத்தும்.