தொடர் விடுமுறையையொட்டி பழநியில் குவிந்த பக்தர்கள்

By செய்திப்பிரிவு

பழநி: அரசு விடுமுறை நாளான நேற்று பழநி முருகன் கோயிலில் காலை முதலே கேரள, தமிழக பக்தர்கள் குவிந்தனர். சுமார் 3 மணி நேரம் நீண்டவரிசையில் காத்திருந்து அவர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

ஓணம் பண்டிகை விடுமுறையையொட்டி பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு கடந்த சில நாட்களாக கேரள பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில், அரசு விடுமுறை நாளானநேற்று காலை முதலே கேரளா மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர்.

புரட்டாசி மாதப் பிறப்பையொட்டி மலைக்கோயிலில் நேற்றுஆனந்த விநாயகருக்கு கும்ப கலசங்கள் வைத்து சிறப்புயாக பூஜை, வெள்ளிக் கவச அலங்காரம்,தீபாராதனை நடைபெற்றது. மலைக்கோயிலில் பொது மற்றும் கட்டண தரிசன வரிசையில் 3 மணிநேரம் வரை பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

நேற்று வெயில் அதிகமாக இருந்ததால் வரிசையில் காத்திருந்த முதியோர், குழந்தைகள் சிரமப்பட்டனர். ரோப் கார் மற்றும் வின்ச் ரயில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருந்ததால், 2 மணி நேரம் வரை காத்திருந்து மலைக்கோயிலுக்குச் சென்றனர். அன்னதானம் வழங்கும் இடத்திலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் வந்த வாகனங்களால் பழநி நகர், சந்நிதி வீதி,குளத்துச் சாலை, அருள்ஜோதி வீதி, இடும்பன் இட்டேரி சாலை,பூங்கா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE