காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகே உள்ள பழைய சீவரம் பகுதியில், பராந்தக சோழர் காலத்தில் கட்டப்பட்ட பழமையான மற்றும் புகழ்பெற்ற மன்னேரி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று குடமுழுக்கு விழா நடைபெற்றது.
இதையொட்டி கடந்த 2 நாட்களாக கணபதி பூஜை, கோ பூஜை, தன பூஜை, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, பூர்ணாஹுதி மற்றும் யாக சாலை பூஜைகள் நடந்தன. நேற்று காலை 9.30 மணியளவில், கலச பூஜை நடைபெற்றது. அப்போது, சிவாச்சாரியார்கள் யாக சாலையிலிருந்து கலசங்களை கொண்டு சென்று மன்னேரி அம்மன் கோயில் விமான கோபுரத்தின் மீது கலசாபிஷேகம் செய்தனர்.
அதன் பின்னர், புனித கலச நீர் அங்கு திரண்டிருந்த திரளான பக்தர்கள் மீதும் தெளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன மேலும்,அன்னதானம் வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர், பழையசீவரம் ஊராட்சி தலைவர் மகாலட்சுமி நீலமேகம் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.