திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் வரும் 17-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
‘மலையே மகேசன்’ எனப் போற்றி வணங்கப்படும் திருவண்ணாமலையில் உள்ள மகாதீபம் ஏற்றப்படும் திரு அண்ணாமலையை பவுர்ணமி நாளில் கிரிவலம் சென்று லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபடுகின்றனர். அதன்படி புரட்டாசி மாத பவுர்ணமி வரும் செவ்வாய்கிழமை (செப்.17) காலை 11.27 மணிக்கு தொடங்கி, மறுநாள் புதன்கிழமை (செப்.18) காலை 9.10 மணிக்கு நிறைவு பெறுகிறது.
மேற்கண்ட நேரத்தில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் எதுவென அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மிலாடி நபி திருநாளையொட்டி வரும் 17-ம் தேதி விடுமுறை என்பதால், பவுர்ணமி கிரிவலம் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருக்கும் என மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை கணித்துள்ளது.
இதனால் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பை பலப்படுத்தியும், போக்குவரத்து நெரிசலை தவிர்த்து கூடுதல் எண்ணிக்கையில் சிறப்புப் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அண்ணாமலையார் கோயில் உள்ளே பக்தர்கள் விரைவாக சுவாமி தரிசனம் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.