விநாயகர் வழிபாட்டால் கிடைக்கும் 21 நன்மைகள் | விநாயகர் சதுர்த்தி சிறப்பு

By செய்திப்பிரிவு

நம் கஷ்டங்களையும், வினைகளையும் தீர்த்து வைப்பவர் விநாயகர். அதனால் தான் விநாயகரை வினை தீர்ப்பவர் என்கின்றோம். எந்த ஒரு புது வேலையை செய்யத் தொடங்கும் பொழுதும், முதலில் விநாயகர் வணக்கம் செய்வது முக்கியம். விநாயகரின் சிறப்பினை உணர்த்த விநாயகர் புராணம் உள்ளது. சிவபெருமான் வாயிலாக தாம் உணர்ந்த விநாயகர் புராணத்தை பிரம்மன் வியாசருக்கு உபதேசிக்க, அவர் பிறகு பிருகு முனிவருக்கு உபதேசிக்க அவர் இப்பிரிவுகளை 250 பிரிவுகளுடைய உபாசனா காண்டம், லீலா காண்டம் என இரண்டு காண்டங்களாக அமைத்துப் பன்னிரெண்டாயி ரம் சுலோகங்களாக  விநாயகர் புராணம் பாடினார்.

விநாயகர் புராணத்தில் இரண்டாம் காண்டமாகிய லீலா காண்டத்தில் விநாயகப்பெருமான் எடுத்த பனிரெண்டு அவதாரங்களும் கூறப்பட்டுள்ளன. அந்த அவதாரங்களில் அவர் வக்கிர துண்டர், சிந்தாமணி விநாயகர், கஜநாதர், விக்கினராஜர், மயூரேசர், பாலச்சந்திரர், தூமகேது, கணேசர்,கணபதி, மகோத்சுதர், முண்டி விநாயகர் மற்றும் வல்லபை கணேசர் என்ற பெயர்களோடு விளங்கியதாக அப்புராணம் கூறுகிறது. பார்வதி தேவி மண்ணில் ஒரு உருவம் செய்து அதற்கு உயிர் கொடுத்து  விநாயராக அவதாரம் செய்வித்தது ஆவணி மாதத்தில் சதுர்த்தி தினத்தில் தான். அந்த நாளையே விநாயகர் ஜெயந்தியாக, விநாயகர் சதுர்த்தி விழாவாக நாம் கொண்டாடுகிறோம்.

மண்ணில் அமைந்த விநாயகருக்கு அனைத்து அலங்காரங்களையும் செய்து, விநாயகருக்கு பிடித்தமான கொழுக்கட்டை, அவல் முதலான அனைத்தையும் அமைத்து வழிபாடு செய்ய வேண்டும். விநாயகர் சதுர்த்தி வழிபாட்டினால் தர்மம், பொருள், இன்பம், செளபாக்கியம், கல்வி, பெருந்தன்மை, நல்வாழ்வுடன் கூடிய மோட்சம், முகலக்ஷணம், வீரம், வெற்றி, எல்லோரிடமும் அன்பு பெறுதல், நல்ல சந்ததி, நல்ல குடும்பம், நுண்ணறிவு, நற்புகழ், வாக்கு சித்தி, சாந்தம், பில்லி சூனியம் நீங்குதல், அடக்கம் ஆகிய 21 விதமான பலன்கள் கிடைக்கும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE