பழநி: பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு கண்காட்சி இன்றுடன் (வெள்ளிக்கிழமை) நிறைவடைய உள்ள நிலையில் கண்காட்சியை காண கூட்டம் கூட்டமாக மாணவர்கள், பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு பழநியில் ஆக.24, 25-ம் தேதிகளில் நடைபெற்றது. மாநாட்டை முன்னிட்டு அறுபடை வீடுகள் புகைப்பட கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக, மலை வடிவில் பிரம்மாண்ட அரங்கம் அமைக்கப்பட்டு, அதனுள் அறுபடை வீடு கோயில்களில் மூலவர், முருகனின் பெருமைகளை கூறும் புகைப்பட கண்காட்சி, புத்தகக் கண்காட்சி, 200 பேர் அமர்ந்து பார்க்கும் 3-டி திரையரங்கம் மற்றும் 100 பேர் அமர்ந்து பார்க்கும் விர்ச்சுவல் ரியாலிட்டி (விஆர்) அரங்கம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டது.
மாநாடு முடிந்தும், ஆக.30-ம் தேதி வரை, காலை 9 முதல் இரவு 8 மணி வரை பொதுமக்கள் இலவசமாக கண்காட்சியை பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்த சில நாட்களாக கண்காட்சியை ஏராளானோர் குடும்பம் குடும்பமாக வந்து பார்வையிட்டுச் சென்றனர்.
» “இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் 42% பெண்கள் பணிக்குச் செல்கிறார்கள்” - அமைச்சர் உதயநிதி
» முக்கிய குற்ற வழக்குகள் புலனாய்வு: சென்னை காவல் ஆணையர் - என்ஐஏ மண்டல இயக்குநர் சந்திப்பு
இந்நிலையில், இன்றுடன் (வெள்ளிக்கிழமை) கண்காட்சி நிறைவடைய உள்ளதால் இன்று காலை முதலே கண்காட்சியை காண பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்து வருகின்றனர். அங்கு, 3-டியில் முருகனின் பாடலையும், விர்ச்சுவல் ரியாலிட்டியில் (விஆர்) அறுபடை வீடுகளையும் கண்டு வியந்தும், கண்காட்சியில் இடம்பெற்றுள்ள சிலைகளுக்கு முன் நின்று செல்ஃபி எடுத்து மகிழ்ந்தும் வருகின்றனர்.