திருப்பத்தூர்: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா நேற்றுகொடியேற்றத்துடன் தொடங்கியது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள பிள்ளையார்பட்டியில் பிரசித்திபெற்ற கற்பக விநாயகர் கோயில் உள்ளது. இங்கு சதுர்த்தி விழா கொடியேற்றம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி, காலை 11 மணிக்கு கொடிமரம் முன்பாக விநாயகர், அங்குசத்தேவர், சண்டிகேசுவரர் எழுந்தருளினர்.
தொடர்ந்து கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. விழா நாட்களில் தினமும் காலையில் கேடகத்திலும், மாலையில் சிம்மம், பூதம், கமலம், ரிஷபம், மயில், குதிரை உள்ளிட்ட வாகனங்களிலும் விநாயகர் எழுந்தருளி, வீதியுலா நடைபெறும்.
செப். 3-ம் தேதி மாலை கஜமுக சூரசம்ஹாரம், செப். 6-ம் தேதி தேரோட்டம் நடைபெறும். அன்று ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் நடைபெறும் சந்தனக்காப்பு அலங்காரத்தில் மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை மூலவர் காட்சியளிப்பார்.
முக்குறணி மோதக படையல்: செப். 7-ம் தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தில் அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து, தீர்தவாரி உற்சவம், முக்குறணி மோதக படையல் நடைபெறும். இரவு பஞ்சமூர்த்தி புறப்பாடுடன் விழா நிறைவு பெறும்.
ஏற்பாடுகளை அறங்காவலர்கள் காரைக்குடி மெய்யப்ப செட்டியார், பூலாங்குறிச்சி முத்துராமன் செட்டியார் ஆகியோர் தலைமையில், கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.