பழநி: பழநி முருகன் கோயிலில் பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து சட்டமன்ற பேரவை ஏடுகள் குழுவினர் இன்று (ஆக.28) ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் ஏடுகள் குழு 2 நாட்கள் ஆய்வுப் பயணமாக திண்டுக்கல் மாவட்டத்துக்கு வந்துள்ளனர். அதன்படி புதன்கிழமை காலை குழுவின் தலைவர் லட்சுமணன் தலைமையில் குழு உறுப்பினர்கள், பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் தரிசனம் செய்தனர். அதன் பிறகு, கோயிலில் பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து, பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சியை சட்டமன்ற பேரவை ஏடுகள் குழுவினர் பார்வையிட்டனர்.
இதையடுத்து, ரெட்டியார்சத்திரத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் கட்டப்பட்டு வரும் வீடுகளையும் அவர்கள் பார்வையிட்டனர். ஆய்வின் போது, எம்எல்ஏ-க்கள் எபினேசர் (எ) ஜான் எபினேசன், அமுல்கந்தசாமி, பாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர். இக்குழுவினர் நாளை (ஆக.29) கொடைக்கானலில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளனர்.
» 17 ஆண்டுகளுக்குப் பிறகு காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயில் குடமுழுக்கு விழா கோலாகலம்
» எச்ஐவி குறித்து நடமாடும் வாகனங்களின் மூலம் நீலகிரியில் தீவிர விழிப்புணர்வு பிரச்சாரம்