அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் 5 லட்சம் பக்தர்கள் பங்கேற்பர் என எதிர்பார்ப்பு

By செய்திப்பிரிவு

பழநி: பழநியில் நடைபெற உள்ள அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டுக்கு 5 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக இந்து சமய அறநிலையத் துறைச் செயலர் சந்திரமோகன் கூறினார்.

அறநிலையத் துறை சார்பில் ஆக. 24, 25-ம் தேதிகளில் பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற உள்ளது. இந்நிலையில்,மாநாடு தொடர்பாக அரசுத் துறைகளின் ஒருங்கிணைப்புக் கூட்டம், அறநிலையத் துறைச் செயலர் சந்திரமோகன் தலைமையில் பழநியில் நேற்று நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி முன்னிலை வகித்தார்.இதில் அறநிலையத் துறைச் செயலர் சந்திரமோகன் பேசியதாவது:

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 10 இடங்களில் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாநாடு நடைபெறும் இடம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சுத்தமாகப் பராமரிக்கும் வகையில், நகராட்சி சார்பில் 200 இடங்களில் குப்பைத் தொட்டி வைக்கப்படும். சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணியாற்ற தூய்மைப் பணியாளர்கள் பணியில் அமர்த்தப்படுவர். மேலும், 17 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடைபெறும். 14 இடங்களில் ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் நிறுத்திவைக்கப்படும்.

பக்தர்களுக்கு வழங்கப்படும் உணவு சுகாதாரமான முறையில் தயார் செய்யப்படுவதை உணவுப்பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வுசெய்ய வேண்டும் முதியோர், மாற்றுத் திறனாளிகள் பேருந்து நிலையத்தில் இருந்து மாநாடு நடைபெறும் இடத்துக்கு வந்து செல்ல 10 பேட்டரி கார்கள் பயன்படுத்தப்பட உள்ளன. 226 இடங்களில் கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. பொதுமக்கள்மாநாட்டைப் பார்வையிட 22 இடங்களில் எல்இடி திரை வசதி ஏற்படுத்தப்படும். இவ்வாறு அறநிலையத் துறைச்செயலர் சந்திரமோகன் பேசினார்.

கூட்டத்தில், அறநிலையத் துறை ஆணையர் ஸ்ரீதர், கூடுதல் ஆணையர் சுகுமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப், மாவட்டவருவாய் அலுவலர் ஷேக்முகைதீன், அறநிலையத் துறை இணை ஆணையர்கள் மாரிமுத்து, லட்சுமணன், கார்த்திக் மற்றும் பல்வேறுதுறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர், பழனியாண்டவர் கல்லூரியில் நடைபெற்று வரும்மாநாட்டுப் பணிகளை அறநிலையத் துறைச் செயலர் சந்திரமோகன் ஆய்வு செய்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE