திருப்பதி: திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வரலட்சுமி நோன்பு விழா நேற்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. காலையில், மூலவர் மற்றும் உற்சவ தாயாருக்கு திருமஞ்சன சேவை நடந்தது. அதன் பின்னர் கோயிலில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் உற்சவ தாயாரை தாமரை பீடத்தில் அமர வைத்து, புண்யாகவாசனம், கலசஸ்தாபனம், லட்சுமி சகஸ்ரநாமார்ச்சனை, அஷ்டோத்திர சத நாமாவளி ஆகிய சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதன் பின்னர், மகா ஆரத்தியுடன் வரலட்சுமி விரதம் நிறைவுற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து மாலையில் திருச்சானூர் கோயில் மாட வீதிகளில் தாயார் தங்க ரத்தில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.