ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் ஆடித் திருக்கல்யாணத் திருவிழா!

By எஸ்.முஹம்மது ராஃபி

ராமேசுவரம்: ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் ஆடி திருக்கல்யாண திருவிழாவின் நிறைவு நாளான இன்று சுவாமி-அம்பாள் கெந்தமாதன பர்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது.

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் ஆடித் திருக்கல்யாண திருவிழா கடந்த ஜூலை 29ம் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து ஆகஸ்ட் 4ல் ஆடி அமாவாசை, ஆகஸ்ட் 5ல் தங்கப் பல்லக்கு, ஆகஸ்ட் 6ல் தேரோட்டம், ஆகஸ்ட் 7ல் ஆடிப்பூரம், ஆகஸ்ட் 8ல் ஆடித்தபசு, ஆகஸ்ட் 9ல் திருக்கல்யாணம், ஆகஸ்ட் 10ல் திரு ஊஞ்சல், ஆகஸ்ட் 12ல் மஞ்சல் நீராடல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ஆடி திருக்கல்யாண திருவிழாவின் நிறைவு நாளான இன்று அதிகாலை 4 மணியளவில் கோயில் நடை திறக்கப்பட்டு 5 மணியளவில் ஸ்படிக லிங்க பூஜையும், தொடர்ந்து சாயரட்சை பூஜை, கால பூஜைகள் நடைபெற்றன. பின்னர் காலை 6 மணியளவில் ராமநாதசுவாமி, பிரியாவிடை, பர்வதவர்த்தினி அம்பாள், பஞ்ச மூர்த்திகளுடன் தங்க கேடயங்களில் ராமநாதசுவாமி கோயிலிருந்து புறப்பட்டு, கெந்தமாதன பர்வதம் மண்டகப் படியில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது பக்தர்களுக்கு நீர் மோர், பானக்கம் மற்றும் பிரசாதம் ஆகியன வழங்கப்பட்டன. மாலை 6 மணிக்கு மேல் கெந்தமாதன பர்வதத்திலிருந்து சிறப்பு பூஜை முடிந்து சுவாமி - அம்பாள் புறப்பாடாகி வீதியுலா நடைபெறுகிறது. இரவு 10 மணியளவில் கோயிலை வந்தடைந்தவுடன் சுவாமி சன்னிதியில் அர்த்தஜாம பூஜையும், தொடர்ந்து பள்ளியறை பூஜையும் நடைபெறும். முன்னதாக, கெந்தமாதன பர்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியையொட்டி ராமநாதசுவாமி கோயில் அதிகாலை 6 முதல் நடை சாத்தப்பட்டது இரவு 10 மணி வரையிலும் நடை சாத்தியிருக்கும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE