காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சிக்கு மேற்கில் சுமார் 6 கிமீ முள்ளிமலை என மூன்று மலைகளால் சூழப்பட்ட சிவசைலம் கிராமத்தில், கடனா நதிக்கரையில் பரமகல்யாணி அம்மன் சமேத சிவசைலநாதர் கோயில் அமைந்துள்ளது.
மேற்கு நோக்கி அமைந்திருக்கும் இந்தக் கோயில் பாண்டிய மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டது. ஐந்துநிலைகளை கொண்ட கோபுரத்துடன் கூடிய இந்த கோயிலில் சிவசைலநாதருக்கும் பரமகல்யாணி அம்மனுக்கும் தனித்தனி சந்நிதிகள் உள்ளன. இங்கு உள்ள சிவசைலநாதர் சுயம்புவாக தோன்றியவர். இங்கு பரமகல்யாணி அம்மன் வந்த விதம் சுவாரஸ்யமானது.
இத்தலத்துக்கு அருகே உள்ள கீழ ஆம்பூரில் குழந்தை இல்லாத ஒரு தம்பதியர், அன்னை பராசக்தியை நினைத்து விரதம் இருந்தனர். அவர்களுக்கு காட்சியளித்த பராசக்தி, அந்தப் பகுதியில் உள்ள கிணற்றில் தான் இருப்பதை உணர்த்தி, அந்த விக்ரஹத்தை எடுத்து பரமகல்யாணி' என பெயரிட்டு, சிவசைலநாதர் அருகில் பிரதிஷ்டை செய்து வழிபடுமாறு பணிக்க, அவ்வாறே அவர்கள் செய்ததால் குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது.
பரமகல்யாணி தங்கள் ஊரில் பிறந்தவர் என்பதால் கீழ ஆம்பூர் மக்கள் சித்திரை அல்லது வைகாசி மாதத்தில் பரமகல்யாணி அம்மனை தங்கள் ஊருக்கு அழைத்துச் சென்று 3 நாட்கள் திருவிழா நடத்துகின்றனர். பங்குனி மாதத்தில் தேர்த் திருவிழா முடிந்ததும் சிவசைலநாதரையும் பரமகல்யாணி அம்மனையும் மறுவீடு அழைத்துச் செல்லும் வைபவமும் நடைபெறுகிறது. 2 நாட்கள் பிறந்த ஊரில் தங்கியிருக்கும் பரமகல்யாணி அம்மன் மூன்றாம் நாள் சிவசைலநாதருடன் புறப்படும் போது சீர்வரிசைகளுடன் மக்கள் வழியனுப்பி வைக்கின்றனர்.