பழநி: பழநியிலுள்ள பெரியநாயகியம்மன் கோயிலில் ஆடி லட்சார்ச்சனை விழா இன்று (ஞாயிறு) நடைபெற்றது.
ஆடி மாதம் துவங்கி நேற்று வரை தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள், நூறாயிரம் பூக்கள் தூவி அர்ச்சனை ஆகியவை தொடர்ந்து நடைபெற்றுவந்தன. இன்று காலை அம்மனுக்கு ஆடி லட்சார்ச்சனை வேள்வி நடைபெற்றது.
பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு அம்மனை தரிசித்தனர். ஆடி வெள்ளிக்கிழமை நாட்களில் பெரியநாயகியம்மன் முத்தங்கி அலங்காரம், மீனாட்சி அலங்காரம், சந்தனகாப்பு அலங்காரம், விசாலாட்சி அலங்காரம் என ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒவ்வொரு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
ஆடி மாதம் நிறைவாக ஆகஸ்ட் 16ம் தேதி ஆடி வெள்ளி அன்று அம்மனுக்கு மகாஅபிஷேகம் நடைபெறவுள்ளது. அன்று பெரியநாயகியம்மன் தங்ககவசம் அலங்காரத்தில் வெள்ளி ரதத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார்.