திருக்கழுக்குன்றம் திருமலை சொக்கம்மன் | ஆடி மாதமும் அம்மன் திருவருளும்

By செய்திப்பிரிவு

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் நகரில் அமைந்துள்ள வேதகிரீஸ்வரர் மலைக்கோயிலின் கிரிவலப் பாதையில், மலையையொட்டி சொக்கம்மன் கோயில் அமைந்துள்ளது. சதுரங்கப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த தம்பதியர், வேதகிரீஸ்வரரிடம் வேண்டியதின் பேரில், பெண் குழந்தை ஒன்று பிறக்க, குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என ஆலோசித்தபோது ‘சொக்கம்மாள்’ என பெயர் சூட்டுமாறு அசரீரி ஒலித்ததது.

இதன்பேரில், ‘சொக்கம்மாள்’ என பெயரிட்டு வளர்த்தனர். சொக்கமாளுக்கு திருமண வயதான போது, அதுபற்றி முடிவெடுக்க, வேதகிரீஸ்வரர் மலையை வலம் வந்து ஆலோசிக்கலாம் என உறவினர்கள் கூற, மலையை வலம் வந்த சொக்கம்மாளுக்கு வேதகிரீஸ்வரர் காட்சி யளித்து மலையின் மீது அழைத்து சென்றார்.

பெண்ணைக் காணாமல் திகைத்த பெற்றோர், இறைவனின் பெயரை கூறி கதறியதால், சுவாமி சொக்கம்மாளுடன் அவர்களுக்கு காட்சியளிக்க, தங்களின் அன்புக்காக பரமேஸ்வரியே குழந்தையாக தங்களிடம் வளர்ந்ததையும், இனி தங்களுடன் அவள் வரமாட்டாள் என்பதையும் அந்தப் பெற்றோர் உணர்ந்தனர்.

தங்களுக்கு காட்சியளித்த அந்த இடத்தில், தங்களை நேரில் வந்து வணங்கும் பக்தர்களுக்கு புத்திரப்பேறு, மாங்கல்ய பேறு, செல்வப் பேறு, பிணி நீக்கம் ஆகியவற்றை வழங்க வேண்டும் என அந்தப் பெற்றோர் வரம் கேட்க, அந்த வரத்தை வேதகிரீஸ்வரர் வழங்கியதாக இக்கோயிலின் தல வரலாறு கூறுகிறது. இதன்பேரில், இப்பகுதியில் திருமலை சொக்கம்மன் கோயில் அமைக்கப்பட்டது. இன்றும் சொக்கம்மாளை தரிசிக்க வரும் பக்தர்கள் தொட்டில் கட்டி, அம்மனை வணங்கி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE