வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் மற்றும் மலைப்பாதையில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டதால், இன்று (திங்கட்கிழமை) மலையேற தடை விதிக்கப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமடைந்த 3 பெண்கள் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மதுரை மாவட்டம் சாப்டூர் வனச்சரகத்தில் கடல் மட்டத்திலிருந்து 4500 அடி உயரத்தில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. சதுரகிரியில் பிரசித்தி பெற்ற ஆடி அமாவாசை திருவிழாவிற்காக ஆகஸ்ட் 1 முதல் 5ம் தேதி வரை பக்தர்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய வனத்துறை, மதுரை மற்றும் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி அளிக்கப்பட்டது.
ஆகஸ்ட் 1 ஆம் தேதி 7 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்களும், இரண்டாம் நாளில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும், 3 ஆம் நாளில் 17 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று ஆடி அமாவாசையை முன்னிட்டு 60 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். கூட்ட நெரிசல் காரணமாக நேற்று பிற்பகல் 12 மணிக்கு தாணிப்பாறை அடிவாரத்தில் உள்ள வனத்துறை கேட் மூடப்பட்டு, பக்தர்கள் மலையேற அனுமதி மறுக்கப்பட்டது.
ஆனால் தேனி மாவட்டம் வருசநாடு உப்புத்துறை பாதை, மதுரை மாவட்டம் சாப்டூர் வாழைத்தோப்பு பாதை வழியாக மாலை 6 மணி வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தொடர்ந்து மலையேறிச் சென்றதால் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில், மலைப்பாதை ஆகியவற்றில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கூட்ட நெரிசல் காரணமாக நடுவழியில் இரட்டை லிங்கம் பகுதியில் இரவு பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். மலைப்பாதையில் மருத்துவ முகாம், மற்றும் போலீஸார் இல்லாததால் பக்தர்கள் ஒரே இடத்தில் உணவு மற்றும் நீரின்றி பல மணி நேரம் காத்திருந்தனர்.
» நூல் இழைகளால் காமராஜர் உருவத்தை வரைந்து அசத்திய வத்திராயிருப்பு மாணவர்!
» வத்திராயிருப்பு அருகே மினி பஸ் கவிழ்ந்து பள்ளி மாணவர்கள் 2 பேர் உயிரிழப்பு
இதனால் கடைசி நாளான இன்று பக்தர்கள் மலை ஏற தடை விதிக்கப்பட்டு, மலை கோயிலில் மற்றும் மலைப்பாதையில் இருந்த பக்தர்கள் சிறுசிறு குழுக்களாக பிரிக்கப்பட்டு மலை இறங்க அனுமதிக்கப்பட்டனர். கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமடைந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த சகோதரிகள் குருகீதா(17), குமரகீதா(18) மற்றும் லட்சுமி(54) ஆகியோர் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேர கட்டுப்பாடு காரணமாக குறிப்பிட்ட நேரத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறியதாலும், போதிய முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்புக்கு போலீஸார், மலைப்பாதையில் மருத்துவக் குழு இல்லாததாலும் பக்தர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.