ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர திருவிழா கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் தரிசனம்

By அ.கோபால கிருஷ்ணன்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர திருவிழாவில் 5-ம் நாளான இன்று (சனிக்கிழமை) பெரியாழ்வார் மங்களாசாசனம் வைபவம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

108 திவ்ய தேசங்களில் முக்கியமானதான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பிரசித்திபெற்ற ஆடிப்பூர தேரோட்ட திருவிழா கடந்த 30-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாள் இரவு 16 வண்டி சப்பரமும், 2-ம் நாளில் ஆண்டாள் சந்திர பிரபை வாகனத்திலும், ரெங்கமன்னார் சிம்ம வாகனத்திலும் எழுந்தருளினர். 3-ம் நாள் வைபவத்தில் ஆண்டாள் தங்க பரங்கி நாற்காலியிலும், ரெங்கமன்னார் அனுமன் வாகனத்திலும் அருள்பாலித்தனர். 4-ம் நாள் விழாவில் ரெங்கமன்னார் கோவர்த்தன கிரி ஸ்ரீ கிருஷ்ணர் அலங்காரத்திலும், ஆண்டாள் சேஷ வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

இதனைத் தொடர்ந்து ஆடிப்பூர திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பெரியாழ்வார் மங்களாசாசன வைபவம் இன்று (ஆக.3) காலை நடைபெற்றது. இதையொட்டி இன்று காலை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் உள்ள ஆடிப்பூர கொட்டகையில் பெரியாழ்வார் எழுந்தருளினார். அதன்பின் ஆடிப்பூர கொட்டகையில் எழுந்தருளிய ஶ்ரீவில்லிபுத்தூர் பெரியபெருமாள், செண்பகத்தோப்பு காட்டழகர் கோயில் சுந்தர்ராஜ பெருமாள், திருவண்ணாமலை ஸ்ரீனிவாச பெருமாள், நின்ற நாராயண பெருமாள் கோயில் திருத்தங்கல் அப்பன், ஆண்டாள் ரெங்கமன்னார் ஆகியோருக்கு பெரியாழ்வார் மங்களாசாசனம் செய்து வைத்தார்.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து இன்று இரவு 10 மணிக்கு மேல் 5 கருட சேவை நடைபெற உள்ளது. இதில் பெரிய பெருமாள், ஸ்ரீ ரெங்கமன்னார், திருத்தங்கல் அப்பன், சுந்தர்ராஜ பெருமாள், ஸ்ரீனிவாச பெருமாள் ஆகியோர் கருட வாகனங்களிலும், ஆண்டாள் பெரிய அன்ன வாகனத்திலும், பெரியாழ்வார் சிறிய அன்ன வாகனத்திலும் ஆண்டாள் கோயிலில் எழுந்தருளி, ரத வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.வெங்கட்ராம ராஜா மற்றும் உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE