முருக பக்தர்களை வரவேற்க பழநியில் மரங்களை அலங்கரிக்கும் வண்ண ஓவியங்கள்

By ஆ.நல்லசிவன்

பழநி: முருகன் மாநாட்டுக்கு வரும் பக்தர்களை வரவேற்கும் வகையில் பழநி பழனி ஆண்டவர் கல்லூரி மரங்களை ஓவியங்களால் அலங்கரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை மாநாட்டு அரங்கம் அமைப்பதற்காக முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற உள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆகஸ்ட் 24 மற்றும் 25-ம் தேதிகளில் பழநியில் உள்ள பழனியாண்டவர் கல்லூரியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் உலகம் முழுவதும் உள்ள சமய பெரியோர்கள், ஆன்மிக அன்பர்கள், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர்.

கடந்த வாரம் மாநாட்டுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து பழனியாண்டவர் கல்லூரியில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு செய்து, அனைத்து அரசு துறைகளின் ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தினார். அதில், மாநாட்டு பந்தல் அமைப்பது, உணவு, குடிநீர், கழிப்பறை, தங்குமிடம் வசதிகளை ஏற்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மாநாட்டுக்கு வரும் முருக பக்தர்களை வரவேற்கும் விதமாக, கல்லூரி வளாகத்திற்குள் நுழையும் போது கண்ணில் படும்படி 100-க்கும் மேற்பட்ட மரங்களில் ஜல்லிக்கட்டு காளை, மயில், சிங்கம், புலி, கரடி மற்றும் புராணங்களை விளக்கும் ஓவியங்களை வரையும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கான பணியில் தேனி, அரவக்குறிச்சி, கரூரைச் சேர்ந்த ஓவியர்கள் ஈடுபட்டுள்ளனர். இது தவிர, முருக பக்தர்களை மாநாட்டுக்கு அழைக்கும் விதமாக பழநி அடிவாரம், கிரி வீதி, மலைக் கோயில் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மாநாடு தொடர்பாக தேவஸ்தானம் சார்பில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டு வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை (ஆக.3) காலை 9.30 மணிக்கு பழனி ஆண்டவர் கல்லூரியில் மாநாட்டு அரங்கம் அமைப்பதற்காக முகூர்த்தக்கால் (கால்கோல்) நடும் விழா அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் நடைபெற உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE