பள்ளி பாடங்களில் பக்தி இலக்கியங்கள்: ஆளுநர் ஆர்.என்.ரவி விருப்பம்

By செய்திப்பிரிவு

மதுரை: பள்ளிகளில் திருவாசகம் போன்ற பக்தி இலக்கியங்கள் பாடமாக இடம் பெறவேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

மதுரை தியாகராசர் கல்லூரியின் நிறுவனர் தின விழா மற்றும்கருமுத்து கண்ணன் நினைவு திருவாசகம் ஒப்புவித்தல் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நேற்று நடந்தது.

கல்லூரிச் செயலாளர் ஹரி. தியாகராசன் வரவேற்றுப் பேசினார். தலைவர் உமா கண்ணன் முன்னிலை வகித்தார். விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி சிறப்பு விருந்தினராக பங்கேற்றுப் பேசியதாவது:

தமிழகத்தில் தொடக்க காலத்தில் பள்ளிகளில் திருவாசகம் போன்ற பக்தி இலக்கியப் பாடங்கள் இருந்தன. காலப்போக்கில் அதுகுறைந்துள்ளது. இனி வரும்காலங்களிலும் பள்ளிகளில் திருவாசகம் போன்ற பக்தி இலக்கியங்கள் பாடமாக இடம்பெற வேண்டும்.

1821-ல் மெட்ராஸ் பிரசிடென்ஸி, கல்வி குறித்து ஓர் ஆய்வு மேற்கொண்டது. அப்போது, பள்ளிகளில் திருவாசகம் பாடமாக இருந்தது. சனாதனத்தில் கர்மா, தார்விக்,காமா மோக்சா போன்ற 4 கோட்பாடுகள் உள்ளன. இதில் தார்விக் வகையில் இக்கல்லூரியின் நிறு வனர் இடம் பெறுகிறார்.

கடந்த 1947-க்குப் பிறகு கல்விஅறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை குறைந்தது. அப்போது கல்வி நிலையங்களைத் தொடங்குவதற்கு அரசு கவனம் செலுத்தவில்லை. இதனால், இது போன்றகல்வியாளர்கள் கல்வி நிலையங்களைத் தொடங்கினர். இதன்மூலம் ஏழைகள் பயன் பெற்றனர்.

எதிர்காலத்தில் அனைத்துத் துறைகளிலும் இந்தியா நல்ல வளர்ச்சி பெறும். இவ்வாறு ஆளுநர் பேசினார்.

முன்னதாக திருவாசகம் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ்களை ஆளுநர் வழங்கினார். பேராசிரியை சாரதா நம்பி ஆரூரனுக்கு ‘உரைஇசையரசி’ என்ற விருது வழங்கப்பட்டது. திருவாசகப் புரவலர் சோ.சோமு சுந்தரம், பேராசிரியர் அருணகிரி உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE