திருத்தணி முருகன் கோயிலில் ஆடி பரணி விழா கோலாகலம்: ஆயிரக்கணக்கில் பக்தர்கள் காவடிகளுடன் பங்கேற்பு

By செய்திப்பிரிவு

திருத்தணி: திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கோலாகலமாக நடைபெற்றுவரும் ஆடிக் கிருத்திகை திருவிழாவில், நேற்று நடைபெற்ற ஆடி பரணி விழாவில் காவடிகளுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

திருத்தணி சுப்பிரமணிய சுவாமிகோயிலில், நேற்று முன்தினம் ஆடிக்கிருத்திகை திருவிழா ஆடி அஸ்வினி விழாவோடு தொடங்கியது. ஆடி பரணி விழாவை முன்னிட்டு,நேற்று அதிகாலை சுப்பிரமணியசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.தொடர்ந்து, சுவாமி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.

இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள், மஞ்சள் மற்றும் சிவப்பு நிற ஆடைகளை உடுத்திக் கொண்டு, பால் காவடி, புஷ்பக் காவடி, மயில் காவடி, பன்னீர் காவடி உள்ளிட்ட காவடிகளுடன் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

ஆடிக் கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு, திருத்தணி கோயில், மலைப்பாதை, சரவணப் பொய்கை தெப்பக்குளம் உள்ளிட்டவை வண்ண மின் விளக்குகளால் ஜொலிக்கின்றன. காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 1,800 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருத்தணி- சித்தூர் சாலையில் முருகூர், சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் பட்டாபிராமபுரம், சென்னை பைபாஸ் ரவுண்டானா அருகே, அரக்கோணம் சாலையில் கார்த்திகேயபுரம் என,4 இடங்களில் தற்காலிகப் பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆடிக் கிருத்திகை திருவிழாவின் முக்கிய விழாவான கிருத்திகை திருவிழா, முதல் நாள் தெப்பத் திருவிழா இன்று (29-ம் தேதி) நடைபெற உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE