‘கோவிந்தா, கோவிந்தா’ முழக்கத்துடன் அழகர்கோவிலில் ஆடி தேரோட்டம் கோலாகலம்

By செய்திப்பிரிவு

மதுரை: மதுரை அழகர்கோவிலில் நேற்று கள்ளழகர் கோயில் ஆடித் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ‘கோவிந்தா கோவிந்தா’ முழக்கத்துடன் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

கள்ளழகர் கோயிலில் சித்திரை மாத பவுர்ணமியன்று வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சியும், ஆடிப் பவுர்ணமியன்று நடைபெறும் தேரோட்டமும் சிறப்புக்குரியவையாகும். இவற்றில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்வர்.

நடப்பாண்டு ஆடித் திருவிழாகடந்த 13-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று இரவு அன்ன வாகனத்தில் சுந்தரராஜப் பெருமாள் எழுந்தருளினார். தொடர்ந்து நாள்தோறும் காலையில் தங்கப் பல்லக்கு, மாலையில் சிம்ம வாகனம், அனுமன், கருடன்,சேஷன், யானை, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் பெருமாள் எழுந்தருளினார்.

முக்கிய விழாவான தேரோட்டத்தையொட்டி நேற்று அதிகாலை கோயிலில் இருந்து சுந்தரராஜப் பெருமாள், தேவி, பூதேவி தாயாருடன் புறப்பாடாகி, தேரில் எழுந்தருளினார். பின்னர் தீப, தூபஆராதனைகள் நடந்தன. கருப்பணசாமி கோயிலில் உத்தரவு பெற்றபிறகு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, நிலையில் இருந்து தேர் புறப்பாடானது. அப்போது பக்தர்கள் ‘கோவிந்தா கோவிந்தா’ என முழக்கமிட்டனர்.

தேரோட்டத்தில் ஆட்சியர் சங்கீதா, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செல்லத்துரை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தேரோட்டத்தைக் காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள் ரத வீதிகளில் திரண்டிருந்தனர். காலை 10 மணியளவில் தேர் நிலையை அடைந்தது.

விழா ஏற்பாடுகளை கோயில்துணை ஆணையர் லெ.கலைவாணன், அறங்காவலர் குழுத் தலைவர் வெங்கடாசலம் மற்றும் கண்காணிப்பாளர்கள், அறங்காவலர் குழுவினர், கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர். இதையொட்டி, மாவட்ட எஸ்.பி. அரவிந்த் தலைமையில் 1,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE