மதுரை: சுற்றுலாத்துறை சார்பில் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக, மதுரையில் உள்ள ஆன்மிக சுற்றுலாத் தலங்களை ஒருங்கிணைத்து ஆடி மாத அம்மன் ஆன்மிக சுற்றுலா செல்வதற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த சுற்றுலா, அடுத்த வாரம் முதல் தொடங்கப்படுகிறது.
இது குறித்து மாவட்ட சுற்றுலா அலுவலர் பாலமுருகன் கூறுகையில், "மதுரை மீனாட்சியம்மன் கோயில், மாரியம்மன் திருக்கோயில், வண்டியூர் காளிஅம்மன் திருக்கோயில், மடப்புரம் வெட்டுடையார் காளியம்மன் திருக்கோயில், தாயமங்கலம் ராக்காயி அம்மன் திருக்கோயல், அழகர் கோயில் ஆகிய திருக்கோயில்களை ஒருங்கிணைத்து, ஆடி மாத அம்மன் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆன்மிக சுற்றுலாவுக்கு ரூ.1,400 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆன்மிக சுற்றுலாவுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் ஏசி பஸ்சில், மதிய உணவுடன் அழைத்து செல்லப் படுகின்றனர். அவர்களுக்கு கோயில்களை சுற்றிப்பார்க்க வைத்து, சிறப்பு தரிசனங்களுக்கும் ஏற்பாடு செய்யப் படுகிறது. தினமும் காலை 8.30 மணியளவில் இந்த சுற்றுலா, அழகர் கோயில் சாலையில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் இருந்து புறப்படுகிறது. வாரந்தோறும் செவ்வாய், வெள்ளிக்கிழமை தோறும், அடுத்த வாரம் முதல் தொடங்கப் படுகிறது. மேலும் விவரங்களுக்கு 04522537461, 9176995841, 6380699288 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்" என்றார்.