சமயபுரம் மாரியம்மன் | ஆடி மாதமும் அம்மன் திருவருளும்

By செய்திப்பிரிவு

சங்கடங்களை தீர்க்கும் தாயாக விளங்கி வருகிறார் திருச்சி மாவட்டத்தில் வீற்றிருக்கும் சமயபுரம் மாரியம்மன். கிருஷ்ணாவதாரத்தில் தேவகியின் ஆண் குழந்தையால் தனக்கு அழிவு உண்டாகும் என்பதை அறிந்த கம்சன், பிள்ளைகள் இடம் மாறியதை அறியாமல் தேவகியிடமிருந்த பெண் குழந்தையை கொலை செய்வதற்காக மேலே தூக்கினான். அப்போது அந்த குழந்தை அவன் கையிலிருந்து மேலே எழும்பி வில், அம்பு, சூலம், பாசம், சங்கு, சக்கரம், வாள் உள்ளிட்ட ஆயுதங்களை தரித்துத் தோன்றினாள். அந்த தேவியே மகா மாரியம்மன் என்று அழைக்கப்பட்டாள்.

மாரியம்மனின் உற்சவத் திருமேனியை ஆதியில் விஜயநகர மன்னர்கள் வழிபாடு செய்து வந்தனர். அந்த ஆட்சிக்கு தளர்ச்சி ஏற்பட்டபோது, அதை வேறொரு இடத்துக்கு பல்லக்கில் எடுத்துச் சென்றனர். சமயபுரத்தில் பல்லக்கை இறக்கி வைத்து விட்டு உணவு உட்கொண்டு விட்டு மீண்டும் வந்து பல்லக்கை தூக்கிய போது அதை தூக்க முடியவில்லை. அதன் பிறகு விஜயரங்க சொக்கநாதர் கண்ணனூரில் தனிக்கோயில் அமைத்து அம்மனை பிரதிஷ்டை செய்தார் என்று கூறப்படுகிறது.

சித்திரைத் தேர்த் திருவிழா, மாசி மாத பூச்சொரிதல், தைப்பூசத் திருவிழா, பஞ்சப்பிரகார விழா நாட்களில் ஏராளமான பக்தர்கள் குவிந்து தரிசனம் செய்வதுண்டு. ஒவ்வொரு வருடமும் மாசி கடைசி ஞாயிறு முதல், 28 நாட்களுக்கு சமயபுரம் மாரியம்மன், பக்தர்களுக்காகவும் உலக நன்மைக்காகவும் பச்சைப் பட்டினி விரதம் மேற்கொள்வதாக ஐதீகம். இந்த நாட்களில் அம்மனுக்கு தளிகை, நைவேத்தியம் கிடையாது. துள்ளு மாவு, திராட்சை, ஆரஞ்சு ,இளநீர், பானகம் மட்டும் படைக்கப்படும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE