சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சனம்: ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்

By செய்திப்பிரிவு

விருத்தாசலம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவம் நேற்று மாலை விமரிசையாக நடைபெற்றது.

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவம் கடந்த 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய விழாவான தேரோட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

தொடர்ந்து, நடராஜ மூர்த்திக்கும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கும் ஏககால லட்சார்ச்சனை நடைபெற்றது. ஆனித் திருமஞ்சன சிறப்பு பூஜைகள் நேற்று அதிகாலை தொடங்கின. ஆயிரங்கால் மண்டப முகப்பில் நடராஜ மூர்த்திக்கும், சிவகாம சுந்தரி அம்பாளுக்கும் மகாபிஷேகம் நடைபெற்றது.

பால், தேன், விபூதி, பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம் உள்ளிட்ட வாசனைப் பொருட்களுடன் அபிஷேகம் செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

மேலும், காலை 6 மணி முதல் 10 மணி வரை ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜ மூர்த்திக்கும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கும் திருவாபரண அலங்காரமும், சிறப்பு அர்ச்சனைகளும் செய்யப்பட்டன. மாலையில்நடராஜ மூர்த்தி சமேத சிவகாமசுந்தரி அம்பாள் நடனப் பந்தலில்முன்னும், பின்னும் 3 முறை சென்று நடனமாடி, ஆனித் திருமஞ்சன தரிசனத்தை அளித்தனர். ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர். இதையடுத்து, சுவாமியும் அம்பாளும் சித்சபையில் பிரவேசித்தனர்.

நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத் தலைவர் பிரசன்னகுமார், குடும்பத்தினருடன் விழாவில் கலந்துகொண்டு, நடராஜப் பெருமானை தரிசனம் செய்தார்.

இன்று பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதி உலாவுடன் ஆனித்திருமஞ்சன உற்சவம் முடிவடைகிறது. விழாவையொட்டி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் சிதம்பரத்துக்கு வந்துள்ளனர். இதனால் சிதம்பரம் நகரமே விழாக்கோலாம் பூண்டிருந்தது.

கடலூர் மாவட்ட எஸ்.பி. ராஜாராம் மேற்பார்வையில், சிதம்பரம் ஏஎஸ்பி ரகுபதி தலைமையில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும், ஆங்காங்கே தன்னார்வலர்களால் அன்னதானம் வழங்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE