சென்னை: வியாசர்பாடி இரவீஸ்வரர் கோயில் சிவலிங்கத்தின் மேல் சூரிய கதிர்கள் மீண்டும்விழ வைக்க ரூ.1.98 கோடி செலவில் கோயில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. சென்னை வியாசர்பாடியில் உள்ள இரவீஸ்வரர் கோயில் 800 ஆண்டுகள் பழமையானது.
இந்தக் கோயிலில் 1970,1980, 2000, 2005, 2013-ம் ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இக்கோயிலில் பல ஆண்டுகளுக்கு முன்புவரை சூரிய கதிர்கள் காலை நேரத்தில் நந்தி பகவான் வழியாக நேரடியாக சிவலிங்கத்தின் மேல் விழுந்துள்ளது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெற வில்லை.
இதுகுறித்து தொல்லியல் துறையினர் கோயிலை ஆய்வு செய்தனர். அப்போது,இக்கோயில் தரைதளத்தில் இருந்து 5 அடிஆழப்பள்ளத்தில் இருப்பது தெரியவந்தது.இதன் காரணமாக சூரிய கதிர்கள் சிவலிங்கத்தின் மேல் விழவில்லை எனவும்,கோயிலை உயர்த்தி வைத்தால் மீண்டும் சூரிய கதிர்கள் சிவலிங்கத்தின் மேல் விழும்என்றும் தொல்லியல் துறை ஆய்வறிக்கை வழங்கியது.
அதன் அடிப்படையில், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, கோயிலை உயர்த்த முடிவெடுக்கப்பட்டு, உபயதாரர் நிதியாக ரூ.1.43 கோடியும், கோயில் நிதியாக ரூ.50 லட்சமும் என ரூ.1.98 கோடி செலவில் கோயில் திருப்பணிகள் மேற்கொள்ள அறநிலையத் துறை திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், இந்த திருப்பணிகளுக்கான பாலாலயம் எனப்படும் ஆரம்பப் பணிகளை அறநிலையத் துறைஅமைச்சர் பி.கே.சேகர்பாபு, பெரம்பூர்எம்.எல்.ஏ. ஆர்.டி.சேகர் ஆகியோர் நேற்றுதொடங்கி வைத்தனர்.