சென்னை: மயிலாப்பூர் வேதாந்த தேசிகர் தேவஸ்தானத்தில் `இந்து குழுமம்’ சார்பில் 1924-ம் ஆண்டுகட்டப்பட்ட ஸ்ரீநிவாச பெருமாள் சந்நிதி 100-வது ஆண்டை ஏப்.22-ம் தேதி நிறைவுசெய்யவுள்ளது. இதையொட்டி பல்வேறுநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை, மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ வேதாந்த தேசிகர் தேவஸ்தானம், 4 நூற்றாண்டுகளுக்கு முன் தோன்றியதாகக் கூறப்படும் பழமையான கோயிலாக அறியப்படுகிறது. 1832-ம் ஆண்டில் பக்தர்கள் சிலரால் ஸ்ரீ வேதாந்த தேசிகர், ஹயக்ரீவர் விக்கிரகங்கள் ஸ்தாபிக்கப்பட்டன.
1924-ம் ஆண்டு இந்து குழுமத்தின் பங்களிப்புடன் ஸ்ரீநிவாசப் பெருமாள் மற்றும் அலர்மேல்மங்கை தாயார் விக்கிரகங்கள் ஒரே சந்நிதியில் நிறுவப்பட்டன. 1975-ம் ஆண்டு நடைபெற்ற மஹா சம்ப்ரோக்ஷணத்தில், கல்கத்தா பாங்கூர் அறக்கட்டளையின் பங்களிப்புடன் தாயாருக்கு தனி சந்நிதி கட்டப்பட்டது. பின்னர் ஆண்டாள், ராமர், லட்சுமி ஹயக்ரீவர், நரசிம்மர், ஸ்ரீ சக்கரத்தாழ்வார், ஸ்ரீ பேயாழ்வார், ஆஞ்சநேயர், ஆழ்வார்கள், ஆச்சார்யர் விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, ஓர் ஆண்டில் 230 நாட்களுக்கும் மேல்திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன.
2023-ம் ஆண்டு பிப். 26-ம் தேதி நடைபெற்ற அறங்காவலர் குழு கூட்டத்தில் சதமான உற்சவத்தை (100-வது ஆண்டு) சிறப்பாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டது. அதன்படி 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
» தஞ்சை பெரிய கோயில் சித்திரை தேரோட்டம் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
» கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் தங்கக் குதிரை வாகனம் மதுரை வந்தது!
2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மடிப்பாக்கம் ஏரியில் தெப்போற்சவம் நடத்தப்பட்டது. மே மாதத்தில் பெருமாள், தாயாருக்கான சிறப்பு லட்சார்ச்சனை நடைபெற்றது. ‘தேசிக சந்தேசம்’ என்ற கோயில் இதழின் 5-ம் ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது. ஜூன் மாதம் பெருமாள் - தாயாருக்கு சிறப்புகல்யாண உற்சவம், ஆகஸ்ட் மாதத்தில் பாலோற்சவம், புஷ்போற்சவம், அக்டோபர் மாதத்தில் அமிர்தோற்சவம், நவம்பர் மாதத்தில் டோலோற்சவம், சிறப்பு ஆர்ஜித பிரம்மோற்சவம், பாதுகா சஹஸ்ர பாராயணம், பாகவத ஸ்தாபக பாராயணம், சொற்பொழிவு மற்றும் பல்லவ உற்சவம் நடைபெற்றன.
இந்நிலையில் ஸ்ரீ வேதாந்த தேசிகர் தேவஸ்தானம் ஸ்ரீநிவாசப் பெருமாள் மற்றும் ஸ்ரீ அலர்மேல்மங்கை தாயாரின் 100-வது ஆண்டு பிரதிஷ்டை விழா தற்போது தொடங்கிகொண்டாடப்பட்டு வருகிறது. நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக 2024-ம் ஆண்டு ஏப். 18-ம் தேதிதொடங்கி 22-ம் தேதி வரை சாந்தி ஹோமம்நடைபெறுகிறது. 21-ம் தேதி மாலை உற்சவருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெறும்.
22-ம் தேதி காலை 5.30 மணிக்கு மூலவருக்கு திருமஞ்சனம், தொடர்ந்து வேத சாற்றுமுறை, மாலை 6.30 மணிக்கு 100 நாதஸ்வரம், தவில், வேதபாராயணம் மற்றும் பிரபந்தம், நாமசங்கீர்த்தனத்துடன் சிறப்பு வீதி புறப்பாடு நடைபெறுகிறது.
சதமான உற்சவ தினத்தில் (ஏப்.22-ம் தேதி)சஹ்ஸ்ர கலசாபிஷேகம், சதுர்வேத பாராயணம், நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடுதல், சதஸ், உபன்யாசம், இசை, நாட்டிய நிகழ்ச்சிகள், வேத பண்டிதர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தல், நன்கொடையாளர்களை கவுரவித்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும். கோயில் மற்றும் கோயில் வரலாறு பற்றிய ஆவணப்படம் வெளியிடப்படும். ஒரு வருட உற்சவம் மற்றும் கோயில் வரலாறு குறித்த சிறப்பு மலரும் வெளியிடப்பட உள்ளது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை தேவஸ்தானத்தின் அறங்காவலர்கள் ஆர்.ராகவன், ஆர்.அனந்தபத்மநாபன், ஆர்.முகுந்தன் செய்து வருகின்றனர். கூடுதல் தகவலுக்கு 044-24953799, 43863747 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.