ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் ஈஸ்டர் பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கிறிஸ்தவ தேவாலயங்களில் உயிர்ப்பு பெருவிழா சிறப்பு வழிபாடு, பிரார்த்தனைகள் நடைபெற்றன.

இயேசு கிறிஸ்துவின் சிலுவைப்பாடுகளையும், மரணத்தையும் நினைவுகூரும் வகையில் கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் 40 நாட்கள் தவக்காலம் அனுசரிக்கின்றனர். நடப்பாண்டு தவக்காலம் பிப்ரவரி 14-ம் தேதி முதல் அனுசரிக்கப்பட்டு வந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை கடைப்பிடிக்கப்பட்டது. பின்னர், பெரிய வியாழன், புனித வெள்ளி அனுசரிக்கப்பட்டது.

சிலுவையில் அறையப்பட்ட இயேசு உயிர்த்தெழுந்த 3-வது நாளை உயிர்ப்புப் பெருவிழா மற்றும் ஈஸ்டர் பண்டிகையாக கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர்.

அதன்படி, உலகம் முழுவதும் நேற்று ஈஸ்டர் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை சாந்தோம் தேவாலயத்தில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து, சிறப்பு ஆராதனைகள், ஜெபங்கள் நடைபெற்றன. இயேசு உயிர்தெழுந்த நிகழ்வு தேவாலயத்தில் அரங்கேற்றப்பட்டது.

பின்னர் திருப்பலியில் பூஜிக்கப்பட்ட தீர்த்தத்தை பாதிரியார்கள், கிறிஸ்தவர்கள் மீது தெளித்து அருளாசி வழங்கினர். நிகழ்ச்சியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். இதேபோல, பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி தேவாலயம், எழும்பூர் திருஇருதய ஆண்டவர் ஆலயம், மயிலாப்பூரில் உள்ள லஸ் தேவாலயம், பரங்கிமலையில் உள்ள புனித தோமையார் மலை தேவாலயம், சின்னமலை ஆரோக்கிய அன்னை திருத்தலம் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் நேற்று முன்தினம் இரவுஈஸ்டர் பண்டிகை சிறப்பு திருப்பலி, பிரார்த்தனைகள் நடைபெற்றன.

பல தேவாலயங்களில் இயேசு உயிர்த்தெழுதல் லேசர் விளக்குகளாலும், நாடகங்களாலும் தத்ரூபமாக காட்சிப்படுத்தப்பட்டன. இரவு 12 மணிக்கு அனைத்து தேவாலயங்களிலும் பட்டாசுகளை வெடித்தும், கேக்குகளைப் பரிமாறியும் இயேசு உயிர்த்தெழுதலை கிறிஸ்தவர்கள் கொண்டாடினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE