திருப்பூர்: கொங்கு மண்டலத்திலுள்ள ஏழு சிவஸ்தலங்களில் முதன்மை பெற்றதாக கருணாம்பிகையம்மன் உடனமர் அவிநாசிலிங்கேஸ்வர் கோயில் திகழ்கிறது.
இங்கு ஆண்டு தோறும் உத்தராயன காலமான மாசி, பங்குனி மாதத்தில் அவிநாசி லிங்கேஸ்வரர் மீது சூரிய ஒளி விழுவது வழக்கம். அப்போது, அவிநாசி லிங்கேஸ்வரரை சூரிய பகவான் வணங்கிச் செல்வது ஐதீகம். நேற்று காலை சூரிய உதயத்தின் போது, பழமையான இக்கோயிலின் ராஜ கோபுரம் வழியாக சூரிய ஒளி ஊடுருவி அவிநாசி லிங்கேஸ்வரர் மீது விழுந்து, வணங்கியது.
அப்போது, பொன்னிறமாக அவிநாசி லிங்கேஸ்வரர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். காலை 6.45 மணிக்கு தொடங்கி 5 நிமிடங்களுக்கும் மேல் சூரிய கதிர்கள் சிவலிங்கத்தின் மீது நிலையாக இருந்து, படிப்படியாக மறைய ஆரம்பித்தது. இந்த அபூர்வ நிகழ்வை ஏராளமான பக்தர்கள் கண்டு, சாமி தரிசனம் செய்தனர்.