கோவை: கோவை காந்திபுரம் நஞ்சப்பா சாலையில், விஏஓ அலுவலகம் அருகே கண்ணனூர் மாரியம்மன் கோயில் இருந்தது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள காந்திபுரம் சித்தி விநாயகர் கோயிலின் உபகோயிலாக, இக்கோயில் இருந்து வந்தது.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் மேம்பாலம் கட்டும் பணிக்காக, கண்ணனூர் மாரியம்மன் கோயில் அகற்றப்பட்டது. அங்கிருந்த சுவாமி சிலைகள் வேறு கோயிலில் தற்காலிகமாக வைக்கப்பட்டிருந்தன. கண்ணனூர் மாரியம்மன் கோயில் கட்ட புதிய இடம் ஒதுக்க வேண்டுமென அறநிலையத் துறையினரிடம் பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர்.
நஞ்சப்பா சாலை ஜி.பி.சிக்னல் அருகே விஏஓ அலுவலகத்தில் இருந்து 50 மீட்டர் தூர இடைவெளிக்கு உட்பட்ட பகுதியில் 3.15 சென்ட் பரப்பளவில் புதிதாக கண்ணனூர் மாரியம்மன் கோயில் கட்ட அறநிலையத் துறையினர் இடம் ஒதுக்கினர். ரூ.22 லட்சம் மதிப்பில் கோயில் கட்ட தமிழக அரசு சார்பில் அறநிலையத் துறையினர் நிதி ஒதுக்கினர்.
கோயில் கட்டும் பணிகளுக்கான பூமி பூஜை நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் ரமேஷ், சித்தி விநாயகர் கோயில் செயல் அலுவலர் ராஜேஷ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 5 மாதங்களுக்குள் கோயில் கட்டி முடிக்கப்படும் என கோயில் செயல் அலுவலர் ராஜேஷ் தெரிவித்தார்.