கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அருகே ஆவத்துவாடி மாரியம்மன், காளியம்மன், செல்லியம்மன்கோயிலில் மாசித் திருவிழாவை முன்னிட்டு, பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாகக் கோயிலுக்கு வந்து அம்மனை வழிபட்டனர்.
போச்சம்பள்ளி அருகே ஆவத்துவாடி மாரியம்மன், காளியம்மன், செல்லியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாசித் திருவிழா 3 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு திருவிழா நேற்று தொடங்கியது. முதல் நாளில் ஏராளமான பெண்கள் மாவிளக்கு எடுத்தும், கோயில் பூசாரி கரகம் எடுத்தும் ஊர்வலமாகக் கோயிலுக்கு வந்த அம்மனுக்கு மாவிளக்கைப் படைத்து வழிபட்டனர்.
முன்னதாக ஊர்வலத்தின் போது, தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றவும், நோயின்றி வாழவும் பெண்கள் மற்றும் ஆண்கள் தரையில் படுத்துக் கொண்டனர் அவர்கள் மீது பூங்கரகம் தலையில் சுமந்தபடி சென்ற பூசாரி நடந்து சென்றார். இதையொட்டி, இன்றும் ( 26-ம் தேதி ), நாளையும் அம்மனுக்குச் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.