கும்பகோணம்: மாசிமகப் பெருவிழாவையொட்டி கும்பகோணம் மகாமக குளத்தில் நேற்று தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு புனித நீராடினர்.
கும்பகோணத்தில் மகாமகம் தொடர்புடைய 12 சிவன் கோயில்களில் ஆண்டுதோறும் மாசி மக விழா விமரிசையாக நடைபெறும். நடப்பாண்டு காசி விஸ்வநாதர், சோமேஸ்வரர், கவுதமேஸ்வரர், அபிமுகேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர் ஆகிய 5 சிவன் கோயில்களில் கடந்த 15-ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. தொடர்ந்து தினமும் காலை, மாலை நேரங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.
மாசி மகத்தையொட்டி நேற்றுமகாமக குளத்தின் நான்கு கரைகளிலும் காசி விஸ்வநாதர், சோமேஸ்வரர், கவுதமேஸ்வரர், அபிமுகேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், நாகேஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், கோடீஸ்வரர், அமிர்தகலசநாதர், பாணபுரீஸ்வரர் ஆகிய 10 சிவன் கோயில்களிலிருந்து பஞ்சமூர்த்திகளுடன் சுவாமி, அம்பாள் எழுந்தருளினர்.
தொடர்ந்து, அந்தந்த கோயில் அஸ்திரதேவருக்கு 21 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பிற்பகல் 12.30 மணியளவில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. அப்போது, அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மகாமக குளத்தில் புனித நீராடினர். ஆதிகும்பேஸ்வரர், கம்பட்ட விஸ்வநாதர் கோயில்களில் பாலாலயம் செய்யப்பட்டுள்ளதால், இக்கோயில்களில் நடப்பாண்டு மாசிமக விழா நடைபெறவில்லை.
» ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமியை வரவேற்ற இஸ்லாமியர்கள் - மாசிமக திருவிழாவில் மத நல்லிணக்கம்
» மாசிமக விழா: கும்பகோணத்தில் 5 கோயில்களில் தேரோட்டம் கோலாகலம்
வைணவ தலங்களில் தேரோட்டம்: வைணவத் தலங்களான சக்கரபாணி, ராஜகோபால சுவாமி, ஆதிவராகப் பெருமாள் கோயில்களில் மாசிமக விழா கடந்த 16-ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மாசி மகத்தையொட்டி, சக்கரபாணி கோயில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில், சுதர்சனவல்லி, விஜயவல்லி தாயாருடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் சக்கரபாணி சுவாமி எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். இதேபோல, ராஜகோபால சுவாமி,ஆதிவராகப் பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
மேலும், மாசி மகத்தை முன்னிட்டு கும்பகோணம் பொற்றாமரைக் குளத்தில் சாரங்கபாணி கோயில் தெப்ப உற்சவம் நேற்று நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சாரங்கபாணி சுவாமி தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.