மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள காரமடை அரங்கநாதர் சுவாமி கோயிலில், மாசிமக தேர்த் திருவிழா கடந்த 18-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அன்று முதல் சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள், பல்வேறு வாகனங்களில் ரங்கநாதர் எழுந்தருளல், பெட்டத்தம்மன் அழைப்பு, அரங்கநாதர் திருக்கல்யாண உற்சவம் என தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவ்விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடந்தது. கோயிலின் முன்புறம் அலங்கரிக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட தேரில் அரங்கநாதர், ஸ்ரீதேவி பூதேவியுடன் நேற்று மாலை எழுந்தருளினார். தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ‘கோவிந்தா, கோவிந்தா’ என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
கோயிலின் நான்கு மாட வீதிகள் வழியாக தேர் பவனி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி என பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தேர்த் திருவிழாவையொட்டி, கோவை - மேட்டுப்பாளையம் இடையே போக்கு வரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. அரசு போக்கு வரத்துக் கழகம் சார்பில் விழாக்கால சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. 300-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.