நாமக்கல்: திருச்செங்கோடு சின்ன ஓங்காளியம்மன் கோயில் மாசி குண்டம் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் அலகு குத்தியும், அக்னிச் சட்டி ஏந்தியும் நேர்த்திக் கடன் செலுத்தினர்.
திருச்செங்கோட்டில் பிரசித்தி பெற்ற சின்ன ஓங்காளியம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாசி குண்டம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு விழா கடந்த 16-ம் தேதி தொடங்கியது. விழாவின் ஒரு பகுதியாக அலகு குத்தியும், அக்னிச் சட்டிகளை ஏந்தியும் பக்தர்கள் நேர்த்திக் கடனை செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இதில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அக்னிச் சட்டி எடுத்தும், அலகு குத்தியும் நான்கு ரத வீதிகள் வழியாகச் சென்று கோயிலை வந்தடைந்தனர். இன்று ( 25-ம் தேதி )108 சங்காபிஷேகம், பூச்சொரிதல் ஆகிய நிகழ்வுகள் நடக்க உள்ளன. முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி வரும் 27-ம் தேதி நடக்க உள்ளது. தொடர்ந்து அம்மன் திருவீதி உலாவுடன் விழா நிறைவு பெறுகிறது.