திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி பிரேக் தரிசனம்: ‘பே லிங்க்’ மூலம் பணம் செலுத்தி டிக்கெட் பெறலாம்

By என்.மகேஷ்குமார்


திருமலை: விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி பெறும் வசதியை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பக்தர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க சிபாரிசு கடிதங்கள் கொண்டு வருவோருக்கு விஐபி பிரேக் தரிசனத்தில் தேவஸ்தானம் அனுமதி அளித்து வருகிறது. இவர்கள் திருமலையில் உள்ளஇணை நிர்வாக அதிகாரி (ஜேஇஓ)அலுவலகம் சென்று, சிபாரிசு கடிதத்துடன் தங்களின் ஆதார் விவரத்தை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு விண்ணப்பித்தவர்களுக்கு அன்று மாலை 4 மணிக்கு பிறகு செல்போனில் குறுஞ்செய்தி வரும். இவர்கள் திருமலையில் உள்ள எம்பிசி-34 எனும் இடத்திற்கு சென்று, அந்த குறுந்தகவலை காண்பித்து மறுநாள் காலை தரிசனத்துக்கான விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டை பணம் செலுத்தி பெறவேண்டும்.

இந்த முறையில், மறுநாள் காலை தரிசனத்திற்கு வரும் பக்தர்கள், முந்தைய நாள் இரவுஎம்பிசி-34 கட்டிடத்தின் அருகேநூற்றுக்கணக்கில் காத்திருப் பார்கள். இவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட் பெறவேண்டியிருக்கும். சில நேரங்களில்சிபாரிசு கடிதம் கூட ரத்தாகி, டிக்கெட்டுக்கான குறுஞ்செய்தி வராமல் போவதும் உண்டு. இதைக்கூட அறிந்து கொள்ள முடியாமல் பலர் திருமலையிலேயே காத்திருப்பது வழக்கம்.

இந்தப் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒரு புதிய திட்டத்தை தேவஸ்தானம் கடந்த பிப்ரவரி 1-ம் தேதி அமல்படுத்தி உள்ளது. அதாவது, திருமலையில் சிபாரிசு கடிதத்தை, ஆதாருடன் விண்ணப்பித்த பக்தர்கள் டிக்கெட்டுக்காக அன்று இரவு வரை காத்திருக்க தேவையில்லை. சிபாரிசு கடிதங்கள் பரிசீலிக்கப்பட்டு மாலை 4 மணிக்குபிறகு செல்போனில் குறுஞ்செய்தியும், டிக்கெட் தொகையை செலுத்துவதற்காக பே லிங்க்-ம் வரும்.

இதன் மூலம் பக்தர்கள் ஆன்லைனில் டிக்கெட்டுக்கான பணத்தை செலுத்தினால், உடனே தரிசன டிக்கெட் செல்போனில் வந்துவிடும். இதை வைத்து மறுநாள் காலை விஐபி பிரேக்தரிசனத்திற்கு பக்தர்கள் செல்லலாம். இந்த புதிய திட்டத்துக்கு பக்தர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE