சபரிமலையில் ஜன.20 வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி: 21-ல் மகர விளக்கு உற்சவம் நிறைவு

By என்.கணேஷ்ராஜ்

குமுளி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு பூஜை காலம் வரும் 21-ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இதனை முன்னிட்டு வரும் 20-ம் தேதி இரவு 10 மணி வரை மட்டுமே சுவாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர விளக்கு பூஜைக்காக கடந்த டிச.30-ம் தேதி நடை திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் அதிகாலை 3 மணி முதல் இரவு 11 மணி வரை பல்வேறு வழிபாடுகள் நடைபெற்றன. உச்ச நிகழ்வாக கடந்த 15-ம் தேதி மகரஜோதி பெருவிழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சன்னிதானம் அருகே உள்ள மணிமண்டபத்தில் ஐயப்பனுக்கு பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் 20-ம் தேதியுடன் இந்த வழிபாடுகள் நிறைவடைய உள்ளன. ஆகவே, அன்று இரவு 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட உள்ளனர். 21-ம் தேதி பந்தளம் ராஜ குடும்பத்தினரின் சுவாமி தரிசனத்துக்குப் பிறகு காலை 6 மணிக்கு நடை சாத்தப்பட்டு நடப்பு ஆண்டுக்கான மகரவிளக்கு உற்சவம் நிறைவடைய உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE