சபரிமலையில் மகரஜோதி தரிசனம்: பக்தி பரவசத்தில் மூழ்கிய லட்சக்கணக்கான பக்தர்கள்

By செய்திப்பிரிவு

பம்பா: கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் அமைந்துள்ளது ஐயப்பன் திருக்கோயில். மகரவிளக்கு பூஜைக்காக கடந்த டிச.30-ம் தேதி நடைதிறக்கப்பட்டது. தை மாதம் முதல் தேதியான இன்று (திங்கட்கிழமை) மாலை 6.48 மணி அளவில் பொன்னம்பல மேட்டில் ஜோதி வடிவில் சுவாமி ஐயப்பன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

அந்த காட்சியை காண சபரிமலையில் லட்சக்கணக்கான மக்கள் குழுமியிருந்தனர். ஜோதி காட்சி அளித்ததும் பக்தர்கள் ‘சுவாமியே.. சரணம் ஐயப்பா’ என சரணம் கோஷமிட்டு பக்தி பரவசத்தில் மூழ்கினர். மகரஜோதியைக் காண கேரளா, தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்திருந்தனர்.

சுவாமி ஐயப்பன் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்காக காட்சி அளித்தார். அதற்கான திருவாபரணம் பாரம்பரிய முறைப்படி கொண்டு வரப்பட்டது. தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை கேரள மாநில போலீஸார் மேற்கொண்டிருந்தனர்.

மகரஜோதியைக் காண பக்தர்களின் வசதிக்காக சன்னிதானத்தின் திருமுற்றம், பாண்டித்தாவளம், கொப்பரைக்களம், மாளிகைபுரம், அப்பாச்சிமேடு, அன்னதான மண்டபம் உள்ளிட்ட 10 இடங்களில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வரும் 20-ம் தேதி வரை பக்தர்கள் மகரவிளக்கு பூஜைக்காக பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE