கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன்தன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்
குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உன்தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது!
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்
சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே
இறைவா! நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்!
'கண்ணா! ஆயர்குல மக்களாகிய நாங்கள் பசுக்களின் பின்னால் சென்று அவற்றை மேய்த்து, கட்டுச்சாதம் உண்பவர்கள். அதிக ஞானம் இல்லாதவர்கள், எங்களுக்கு தலைவனாக நீ கிடைத்தது நாங்கள் செய்த பெரும் பேறு. உன்னை மாமாயன், நாராயணன், கோவிந்தன் என்று பெயர் சொல்லி அழைக்கிறோமே என்று எங்களை தவறாக நினைக்காதே! நாங்கள் ஏதும் அறியாத சிறு பிள்ளைகள், அதற்காக கோபம் கொள்ளாமல், இறைவா! உன் அருளை எங்களுக்கு தர வேண்டும் என்று ஆயர்குல பெண்கள் கண்ணனிடம் உரிமையுடன் வேண்டுகின்றனர்.
கிருஷ்ணாவதாரத்தில் தான் செய்த பூஜையை ஆயர்குலத்தவர்கள் நிறுத்தியதால், மழை பொழியச் செய்து, மக்களை தவிக்கச் செய்தான் இந்திரன். அப்போது கிருஷ்ணன், அவர்களை மழையில் இருந்து காப்பதற்காக, கோவர்த்தன மலையை குடை போல உயர்த்தினான். தன்னுடைய தவறை உணர்ந்த இந்திரன், கிருஷ்ணனிடம் சரண் புகுந்தான்.
ராமபிரானுக்கு பட்டாபிஷேகம் நடந்த சம்பவத்தைக் கூறும்போது இந்திரலோகத்தில் எட்டு திசை காவலர்கள் பட்டாபிஷேகம் நடத்தியதுபோல, ராமபிரானுக்கு அயோத்தியில் வசிஷ்டர், வாமதேவர், ஜாபாலி, காஷ்யபர், காத்யாயனர், ஸுயஜ்ஞர், கௌதமர், விஜயர் ஆகிய 8 முனிவர்கள் பட்டாபிஷேகம் நடத்தினர் என்று வால்மீகி விளக்கினார். தன்னை இந்திரனுடன் ஒப்பிட்டது. ராமபிரானுக்கு பெரும் குறையாக இருந்தது. ராமாவதாரத்தில் ராமபிரானுக்கு ஏற்பட்ட மனக்குறை, கிருஷ்ணாவதாரத்தில் தீர்ந்தது.