ஆண்டாள் திருப்பாவை 20 | கண்ணனின் அருள்மழையில் நனைவோம்..!

By கே.சுந்தரராமன்

முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயிலெழாய்;
செப்பம் உடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா துயிலெழாய்;
செப்பன்ன மென்முலைச் செவ்வாய் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்;
உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டலோ ரெம்பாவாய்!

தானே வலியச் சென்று பக்தர்கள் அனைவருக்கும் அருள்பாலிக்கும் திருமாலின் குணம் இப்பாசுரத்தில் விளக்கப்படுகிறது. கலியுக தெய்வமாக போற்றப்படும் அவரை வணங்கினால் அனைத்து நலன்களும் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்.

இரண்ய கசீபு, திருமாலின் பக்தர்களுக்கு இன்னல்கள் விளைவித்தபோது, நரசிம்ம அவதாரம் எடுத்து, அரக்கனை அழித்து, மக்களைக் காத்தவர் திருமால். ராவணனிடம் இருந்து தேவர்களைக் காப்பதற்காக, ராமாவதாரம் எடுத்து, அவர்களைக் காத்தவர் பெருமாள். அனைவரது துயர்களையும் துடைக்கும் கலியுக தெய்வமே! கண்ணனே! நேர்மையானவனாகவும் ஆற்றல் மிக்கவனாகவும் விளங்கும் பரந்தாமனே! பகைவர்களுக்கு வியர்வை பெருக்கெடுக்கும்படி அவர்களை புறமுதுகிட்டு ஓடச் செய்யும் தூயவனே! உடனே நீ துயில் எழ வேண்டும்.

பவளச் செவ்வாயும் சிற்றிடையும் கொண்ட நப்பின்னை பிராட்டியே! அலைமகளான மகாலட்சுமிக்கு நிகரானவளே! நீ துயில் எழுந்து, கண்ணனையும் எழச் செய்து எங்களுக்கு விசிறி, கண்ணாடி ஆகியவற்றை அளித்து எங்கள் நோன்புக்கு உதவி புரிய வேண்டும். கண்ணனின் அருள்மழையில் எங்கள் அனைவரையும் நனையச் செய்ய வேண்டும் என்று கண்ணனையும், நப்பின்னை பிராட்டியையும், ஆண்டாளின் தோழிகள் வேண்டுகின்றனர்.

வைணவ சம்பிரதாயப்படி மகாலட்சுமியான திருமகளும், மற்ற ஜீவாத்மாக்களைப் போல பரமாத்மா நாராயணனைச் சார்ந்தவள்தான். இருப்பினும் அவள் இன்றி ஸ்ரீமன் நாராயணன் முழுமை அடைவதில்லை என்பதை ஆண்டாள் இப்பாசுரத்தின் மூலம் விளக்குகிறாள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE