பழநி: பழநியில் இடும்பன்குளம் அருகேயுள்ள உடை மாற்றும் அறைகள் பூட்டிக்கிடப்பதால் பக்தர்கள் சிரமப் படுகின்றனர்.
பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா வரும் ஜன.19-ம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி, மாலை அணிந்து விரதம் இருந்து வரும் பக்தர்கள் முன் கூட்டியே பாத யாத்திரையாக வரத் தொடங்கியுள்ளனர். அவ்வாறு வரும் பக்தர்கள் முன்னதாக, இடும்பன் குளத்தில் புனித நீராடி விட்டு மலைக்கோயிலுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இடும்பன் குளம் அருகில் ஆண்கள், பெண்களுக்கு தனித் தனியே உடை மாற்றும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கடந்த சில நாட்களாக, பக்தர்களின் வருகை அதிகரித்துள்ள நிலையில் உடை மாற்றும் அறைகள் திறக்கப் படாமல் பூட்டியே கிடக்கிறது. அதனால் பெண் பக்தர்கள் உடை மாற்றுவதில் சிரமம் ஏற்படுகிறது. மேலும் குளம் அருகே குப்பை குவிந்து கிடப்பதால் சுகாதாரமற்ற நிலை உள்ளது. எனவே, பூட்டிக் கிடக்கும் உடை மாற்றும் அறையை உடனே திறக்க வேண்டும். இடும்பன் குளம் பகுதியில் சுகாதாரத்தை காக்க தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.