புத்தாண்டு | மதுரை கோயில்களில் திரளான பக்தர்கள் தரிசனம்; மீனாட்சி அம்மன் கோயிலில் இளையராஜா வழிபாடு

By சுப.ஜனநாயகச் செல்வம்

மதுரை: ஆங்கிலப் புத்தாண்டு (2024) பிறப்பை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில், அழகர்கோவில் கள்ளழகர் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். மீனாட்சி அம்மன் கோயிலில் இசையமைப்பாளர் இளையராஜா வழிபாடு செய்தார்.

ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டும் இன்று வழக்கம்போல் மார்கழி மாத திருப்பள்ளி எழுச்சியை முன்னிட்டும் அதிகாலையில் நடைகள் திறக்கப்பட்டன. அதனையொட்டி மதுரையிலுள்ள மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், இம்மையில் நன்மை தருவார் கோயில், கூடலழகர் கோயில், மற்றம் பிற கோயில்களில் பக்தர்கள் அதிகாலையில் திரண்டனர். அதேபோல், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலிலும் பக்தர்கள் தரிசனம் செய்தனர். அழகர்கோவில் கள்ளழகர் கோயிலிலும் தரிசனம் செய்தனர்.


மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர்கள்.

இதற்காக 18-ம்படி கருப்பண சுவாமி கோயிலில் 36 வகை மலர்களுடன் 300 கிலோ பூக்களால் கதவுகள் அலங்கரிக்கப்பட்டிருந்த கதவுகளில் சந்தனம் சாற்றி வழிபாடு செய்தனர். மலை மீதுள்ள சோலைமலை முருகன் கோயில் மற்றும் ராக்காயி அம்மன் கோயிலிலுள்ள நூபுர கங்கையில் பக்தர்கள் புனித நீராடினர்.

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அழகர்மலை மீதுள்ள ராக்காயி அம்மன்

இதனிடையே, இசையமைப்பாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான இளையராஜா இன்று மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அதிகாலை 4.30 மணிக்கு வருகை தந்தார். அதிகாலை 5 மணியளவில் நடைபெறும் பூஜையில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு 5.50 மணியளவில் கோயிலிலிருந்து புறப்பட்டு சென்றார்.

மீனாட்சி அம்மன் கோயில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில், கள்ளழகர் கோயில்களில் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. ஆங்கிலப் புத்தாண்டு என்பதால் வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE