ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் திருமங்கை மன்னன் வேடுபறி உற்சவம்

By செய்திப்பிரிவு

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா ராப்பத்து உற்சவத்தின் 8-ம்திருநாளான நேற்று திருமங்கை மன்னன் வேடுபறி உற்சவம் நடைபெற்றது.

உற்சவர் நம்பெருமாள் சந்தனு மண்டபத்திலிருந்து மாலை 5 மணிக்கு தங்கக் குதிரை வாகனத்தில் புறப்பட்டு, ஆரியபடாள் வாயில் வழியாக கோயிலின் 4-ம் பிரகாரத்தில் உள்ள மணல் வெளிக்கு வந்தார். அங்கு ஓடியாடி வையாளி கண்டருளினார். இதை ஏராளமான பக்தர்கள் கண்டு களித்தனர்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு 7.30 மணியளவில் திருமாமணி ஆஸ்தான மண்டபத்தை அடைந்தார். அங்கு பக்தர்களுக்கு சேவை சாதித்த நம்பெருமாள், இரவு 11 மணிக்குப் புறப்பட்டு, வீணை வாத்தியத்துடன் நள்ளிரவு 12.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

வேடுபறி புராண நிகழ்வு: திருமாலுக்குத் தொண்டு செய்தே தனது செல்வத்தை இழந்த திருமங்கை மன்னன், பெருமாள் தொண்டு தொடர வழிப் பறியில் ஈடுபட்டார். இவரை தடுத்தாட் கொள்ள விரும்பிய பெருமாள் அவரிடம் சிறிது நேரம் விளையாட்டுக் காட்டி, பின்னர் அவரது காதில் ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற மந்திரத்தை உபதேசித்து ஆட்கொண்ட விதம் வேடுபறி உற்சவமாக பக்தர்களின் முன்னிலையில் நடத்திக் காட்டப்பட்டது.

இதையொட்டி, திருமங்கை மன்னன் மரபில் வந்தவர்கள் என்று கூறப்படும் ஸ்ரீரங்கம் தெப்பக்குளத் தெரு காவல் காரர் குடும்பத்தினர் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு மரியாதைகள் வழங்கப்பட்டன. வேடுபறி உற்சவத்துக்கென நம்பெருமாள் தங்கக் குதிரை வாகனத்தில் ஆரியபடாள் வாயில் வழியே மணல் வெளிக்கு வந்து விடுவதால், ராப் பத்து உற்சவத்தில் வேடுபறியன்று மட்டும் பரமபதவாசல் திறப்பு நடைபெறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE