உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பின காண்
செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கொயில் சங்கிடுவான் போதந்தார்;
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய்! எழுந்திராய், நாணாதாய்! நாவுடையாய்!
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்!
அதிகாலைக்கு உண்டான காட்சிகள் விளக்கப்படுகின்றன. பறவைகள் ஒவ்வொன்றாக கூவத் தொடங்குகின்றன. ஆயர்பாடியில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் ஆய்ச்சியர் எழுந்து தயிர் கடையத் தொடங்குகின்றனர். உன் வீட்டின் பின்வாசல் தோட்டத்தில் உள்ள குளத்தில் செங்கழுநீர் மலர்கள் மலர்ந்து விட்டன. ஆம்பல் மலர்கள் தலை கவிழ்ந்தன. காவி உடை அணிந்துள்ள முனிவர்கள் ஒன்றிணைந்து தங்கள் வெண்பற்கள் ஒளிவீச, கோயில்களுக்கு தங்கள் பயணத்தை மேற்கொண்டுள்ளனர். இன்னும் சற்று நேரத்தில் அவர்கள் திருச்சங்கை முழக்கம் செய்துவிடுவார்கள்.
நானே ஒவ்வொருவரது இல்லத்துக்கும் வந்து அனைவரையும் எழுப்புகிறேன் என்று சொன்ன நீயோ, சிறிதும் நாணமில்லாமல் இன்னும் உறங்கிக் கொண்டிருக்கிறாய். உன்னுடைய வாக்குறுதி என்னவாயிற்று? தோழியர் அனைவரும் வந்து எழுப்பும்படி நித்திரையில் இருக்கிறாய்.
சங்கும் சக்கரமும் ஏந்திய பலமான கரங்களை உடையவனும், தாமரை போன்ற விரிந்த கண்களை உடையவனுமான கண்ணனைப் பாட இன்னும் நீ எழுந்து கொள்ளாமல் இருக்கிறாயே. ஆயர் குலப் பெண்ணே! விரைந்து எழுந்து எங்களுடன் நீராட வர வேண்டும் என்று தங்கள் தோழியரை எழுப்புகின்றனர் ஆண்டாளின் தோழிகள்.
சிறிதும் நாணமில்லாமல் பல தவறுகளைச் செய்தவர்கள் கூட கண்ணனைச் சரணடைந்து, அவனிடம் முறையிட்டு, அவனது அருளுக்குப் பாத்திரமாக முடியும் என்பது இப்பாசுரத்தால் விளக்கப்படுகிறது. கண்ணனைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தால் இரவா பகலா என்பதைக் கூட உணர இயலாது.