ஆண்டாள் திருப்பாவை 6 | அறியாமை இருளில் இருந்து எழுவோம்..!

By கே.சுந்தரராமன்

புள்ளும் சிலம்பினகாண்; புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய்! எழுந்திராய், பேய்முலை நஞ்சுண்டு,
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி,
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை,
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள ழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.

அதிகாலை நேரம். பறவைகள் ஒவ்வொன்றாக குரல் எழுப்பி கூவத் தொடங்கி விட்டன. எதைப் பற்றியும் கவலையில்லாமல் இன்னும் உறக்கத்திலேயே இருக்கிறாயே? பறவைகளின் அரசனான கருடனை வாகனமாகக் கொண்ட நம் இறைவன் எழுந்தருளியுள்ள கோயிலில் இருந்து வரும் வெண்சங்கின் பேரொலி உன் காதில் விழவில்லையா?

வஞ்சனையால் வந்த பேய் மகள் பூதனை மார்பில் தடவிய நஞ்சை உண்டு, அவளது உயிரைக் குடித்து அவளுக்கு மோட்சம் அருளியவன் நம் கண்ணன். சகடாசுரனை தன் திருவடிகளால் எட்டி உதைத்தவன். அவனே திருப்பாற்கடலில் அரிதுயில் கொண்டிருக்கும் பரந்தாமன். அவனே உலகுக்கெல்லாம் வித்தானவன்.

ஸ்ரீமன் நாராயணனை உள்ளத்தில் எண்ணி தியானம் செய்யும் முனிவர்களும், யோகிகளும் 'ஹரி', 'ஹரி' என்று அவன் பெயரை சொல்லி அழைக்கின்றனரே.. அந்தப் பேரொலி, என் உள்ளம் புகுந்து என்னை குளிர்விக்கிறது. உன்னைக் குளிர வைக்க வில்லையா? இன்னும் சிறு பிள்ளையாகவே உறக்கத்தில் ஆழ்ந்திருக்கிறாயே? உடனே எழுந்து வா? நாம் அனைவரும் பரமன் புகழ்பாடி மார்கழி நீராடுவோம் என்று தன் தோழியை அழைக்கிறாள் கோதை. அறியாமை என்ற பேருறக்கத்தில் (இருளில்)இருந்து எழுந்து இறைவனின் திருநாமங்களைக் கேட்டு உள்ளம் குளிர வேண்டும். உலகத்தைப் படைத்தவன் அவன். அதை இயக்குவதும் அவனே. இந்த உண்மையை நாம் அனை வரும் உணர்ந்து தெளிய வேண்டும் என்பதை ஆண்டாள் வலியுறுத்துகிறாள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE