ஆனைமலை அருகே அடர்ந்த வனப்பகுதியில் தாடகை நாச்சியம்மன் கோயில் மகாதீபம் விழா

By செய்திப்பிரிவு

பொள்ளாச்சி: அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள தாடகை நாச்சியம்மன் கோயிலுக்கு செல்ல, ஆண்டில் ஒருமுறை கார்த்திகை தீபம் தினத்தில் மட்டுமே அனுமதி என்பதால் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்தனர்.

ஆனைமலை புலிகள் காப்பகத்தின் பொள்ளாச்சி வனக்கோட்டத்தில், கடல் மட்டத்திலிருந்து சுமார் 2000 அடி உயரத்தில் அடர்ந்த வனப் பகுதியில் வன தாடகை நாச்சி அம்மன் கோயில் அமைந்துள்ளது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இருப்பதால் ஆண்டுக்கு ஒருமுறை கார்த்திகை தீபத்தன்று மட்டுமே கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி அளிக்கிறது. அன்றைய தினம் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு மகா தீபம் ஏற்றப்படுவது வழக்கம்.

கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை அடர்ந்த வனப்பகுதியில் செங்குத்தாக உள்ள மலைகளை கடந்து சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் மகா தீபம் ஏற்றி சாமி தரிசனம் செய்தனர். யானை, புலி, சிறுத்தை போன்ற வன விலங்குகள் நடமாட்டம் இருப்பதால் கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பொள்ளாச்சி வனச்சரகர் புகழேந்தி தலைமையில் வனத்துறையின் வேட்டை தடுப்பு காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE