மதுரை கள்ளழகர் கோயில் ராஜகோபுரத்துக்கு கும்பாபிஷேகம் கோலாகலம்

By சுப. ஜனநாயகசெல்வம்


மதுரை: அழகர்கோவில் கள்ளழகர் கோயில் ராஜகோபுரத்துக்கு (18-ம்படி கோபுரம்) இன்று கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ‘கோவிந்தா, கோவிந்தா’ கோஷங்கள் முழங்க கோபுர தரிசனம் செய்தனர். ஹெலிகாப்டர் மூலம் பக்தர்கள் மீது மலர்கள் தூவப்பட்டது.

தென் திருப்பதி என அழைக்கப்படுவதும், 108 திவ்ய தேசங்களில் ஒன்றானதுமான அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் ராஜகோபுரம் 120 அடி உயரம், 7 நிலைகளையுடையது. ராஜகோபுரத்திற்கு கும்பாபிஷேகம் நடத்துவதற்காக சீரமைப்பு பணிகள் ரூ.1.50 கோடி மதிப்பில் 13.3.2022-ல் பாலாலய பூஜையுடன் தொடங்கியது. ராஜகோபுரத்திலுள்ள 628 சிற்பங்கள் பழமை மாறாமல் சுண்ணாம்பு, கருப்பட்டி, கடுக்காய் உள்ளிட்ட கலவைகள் மூலம் சீரமைக்கப்பட்டு வர்ணங்கள் பூசப்பட்டது. ராஜகோபுரத்தில் உள்ள ஆறேகால் அடி உயரமுள்ள 7 கும்பங்களுக்கு தங்க மூலாம் பூசப்பட்டது.

இப்பணிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் பணிகள் முடிவடைந்தன. அதன் பின்னர் நவ.23-ல் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு தயார் நிலையில் இருந்தது. அதனைத் தொடர்ந்து நவ.21-ம் தேதி பூர்வாங்க பூஜையுடன் கும்பாபிஷேகம் தொடங்கியது. இன்று காலையில் கள்ளழகர் கோயில் மூலவர் சன்னதியிலிருந்து பூஜை செய்யப்பட்ட நூபுர கங்கை தீர்த்தக்குடங்கள் 160 கலசங்களை பட்டர்கள் யாக சாலையில வைத்து பூஜை செய்தனர். சுந்தர நாராயண அம்பி பட்டர் தலைமையில் 40 பட்டர்கள் 8 யாக குண்டங்களில் யாகசாலை பூஜை செய்தனர்.

பின்னர் இன்று அங்கிருந்து காலையில் 9.15 மணியளவில் கடங்கள் ராஜகோபுரம் நோக்கி புறப்பாடானது. ராஜகோபுரத்திற்கு சுமார் 9.45 மணியளவில் 7 கும்பங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டது.

பக்தர்கள் ‘கோவிந்தா, கோவிந்தா’ கோஷங்கள் முழங்கினர். இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்க 16 இடங்களில் சுழல்கருவிகள் வசதி செய்யப்பட்டிருந்தது. கும்பாபிஷேகத்தின் போது 3 கருடன் வானில் வட்டமிட்டது.

ஆன்மிக சொற்பாழிவாளர் மங்கையர்க்கரசி கோயிலின் சிறப்புகள் பற்றி வர்ணனை செய்தார். விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் வெங்கடாசலம், துணை ஆணையர் மு.ராமசாமி தலைமையில் அறங்காவலர்கள், கோயில் பணியாளர்கள் செய்தனர். மதுரை மாவட்ட எஸ்பி எஸ். சிவ பிரசாத் தலைமையில் ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE