தஞ்சை பெரிய கோயிலில் அக். 24, 25-ல் ராஜராஜ சோழன் 1038-வது சதய விழா: தமிழக அரசு சார்பில் கொண்டாட்டம்

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர்: மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038-வது சதய விழா தஞ்சாவூர் பெரிய கோயிலில் வரும் 24, 25-ம் தேதிகளில் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக சதய விழாக் குழுத் தலைவர் து.செல்வம் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

மாமன்னன் ராஜராஜ சோழன் முடிசூடிய நாளான ஐப்பசி சதய நாளை, ஆண்டுதோறும் ராஜராஜன் சதய விழாவாகக் கொண்டாடி வருகிறோம். நடப்பாண்டு ராஜராஜ சோழனின் 1038-வது சதய விழா, மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமையில் வரும் 24-ம் தேதி காலை 10 மணிக்குத் தொடங்குகிறது.

தொடர்ந்து, தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் புலத் தலைவர் கோ.தெய்வநாயகம் தலைமையில் நடைபெறும் கருத்தரங்கில், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி மு.ராஜேந்திரன், இந்திய தொல்லியல் துறை கோயில் அளவீட்டுப் பிரிவு இயக்குநர் கே.அமர்நாத் ராமகிருஷ்ணன், ரயில்வே காவல் கண்காணிப்பாளர் த.செந்தில்குமார், சைவ சித்தாந்தப் பேராசிரியர் வீ.ஜெயபால், குந்தவை நாச்சியார் கல்லூரிப் பேராசிரியர் இந்திரா அரசு, சோழர் வரலாற்று ஆய்வு சங்கத் தலைவர் அய்யம்பேட்டை ந.செல்வராஜ் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.

1,038 பரதநாட்டிய கலைஞர்கள்: மாலையில் திருமுறைப் பண்ணிசை, நாத சங்கமம், திருமுறை இசை ஆகியவற்றைத் தொடர்ந்து, மாலை 5.30 மணியளவில் தென்னகப் பண்பாட்டு மையம் சார்பில் 1,038 பரதநாட்டியக் கலைஞர்கள் பங்கேற்கும் சிறப்பு நாட்டிய நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து இரவு 7 மணிக்கு கவிதைப்பித்தன் தலைமையில் கவியரங்கம், 8.15 மணிக்கு சிவதாண்டவம், 8.30 மணிக்கு இசை நிகழ்ச்சி ஆகியவை நடைபெற உள்ளன.

திருமுறைத் திருவீதி உலாள்: சதய விழா நாளான வரும் 25 -ம்தேதி காலை 7.20 மணிக்கு மாமன்னன் சிலைக்கு மாலை அணிவித்தல், 8 மணிக்கு திருமுறைத் திருவீதி உலா, காலை 9.10 மணிக்கு பெருவுடையார், பெரியநாயகிக்கு அபிஷேகம், பிற்பகல் 1.40 மணிக்கு பெருந்தீப வழிபாடு, மங்கல இசை, நடன நிகழ்ச்சி, தேவார இன்னிசை, மாலை 4 மணிக்கு நாட்டியாஞ்சலி, நாத சங்கமம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

மாலை 6 மணிக்கு நடைபெறும் நிறைவு விழாவில், முனைவர் அ.தட்சிணாமூர்த்தி, மருத்துவர் எம்.செல்வராஜ், ஓய்வுபெற்ற வேளாண் இணை இயக்குநர்வ.பழனியப்பன், கவிஞர் கோபாலகிருஷ்ணன் ஆகியோருக்கு மாமன்னன் ராஜராஜன் விருது வழங்கப்பட உள்ளது. இரவு 8 மணிக்கு சுகிசிவம் நடுவராகப் பங்கேற்கும் பட்டிமன்றம் நடைபெறும். நடப்பாண்டு சதய விழா அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் சி.பாபாஜிராஜா போன்ஸ்லே, அறநிலையத் துறை இணை ஆணையர் சு.ஞானசேகரன், சதய விழாக் குழுத் துணைத் தலைவர் எஸ்.சி.மேத்தா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE