திருப்பதியில் வரும் 15 முதல் நவராத்திரி பிரம்மோற்சவம்

By என்.மகேஷ்குமார்


திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவங்கள் நடத்தப்படுகின்றன. இதில் கடந்த செப்டம்பர் 18-ம்தேதி முதல் 26-ம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

தற்போது வரும் 15-ம் தேதிமுதல் 23-ம் தேதி வரை 9 நாட்களுக்கு நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. நவராத்திரி பிரம்மோற்சவத்துக்கு கொடியேற்றமும், கொடி இறக்க நிகழ்ச்சிகளும் கிடையாது. மேலும் தேர்த் திருவிழாவும் நடைபெறாது. அதற்கு பதிலாக தங்கத் தேரோட்டம் மட்டுமே நடத்தப்படும்.

இந்நிலையில், புரட்டாசி மாதத்தில் கட்டுக்கடங்காத கூட்டம்திருமலையில் குவிந்து, சுவாமி தரிசனம் செய்ய சுமார் 48 மணி நேரம் ஆகிறது. கடந்த 2 புரட்டாசி சனிக்கிழமைகளிலும் இதே நிலை நீடித்ததால், வரும் 3 மற்றும் 4வது சனிக்கிழமைகளில் கூட்டத்தை ஓரளவு கட்டுப்படுத்த வரும் 6, 7, 8, 13,14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் திருப்பதியில் விநியோகம் செய்யப்படும் சர்வ தரிசன டோக்கன்களை நிறுத்தி வைப்பது என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தீர்மானித்துள்ளது.

நாளை வெள்ளிக்கிழமை 6-ம் தேதி தொலைபேசி மூலம் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மாரெட்டி பக்தர்களிடம் குறைகளை கேட்க உள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE